சிவகாசி பட்டாசுக் கடை விபத்து- ஸ்கேன் சென்டர் மருத்துவர் மரணம்- பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு உயர்வு
மதுரை: சிவகாசி பட்டாசுக் கடையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பாதிக்கப்பட்டு மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஸ்கேன் சென்டர் மருத்துவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். இதன்மூலம் விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 20ம் தேதி சிவகாசியில் நடந்த வெடி விபத்தில் சிக்கியவர்களில் சிலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்போர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.
சிவகாசி சின்னத்தம்பி நகரைச் சேர்ந்த ஆனந்த் என்பவர் சிவகாசி - விருதுநகர் பைபாஸ் சாலையில் உள்ள காமக் சாலையில் பட்டாசு கடை நடத்தி வந்தார்.
இதன் அருகே தனியார் ஸ்கேன் மருத்துவ மையம் உள்ளது. வியாழக்கிழமையன்று மதியம் பட்டாசு ஆலையில் இருந்து 2 வேன்களில் கொண்டு வரப்பட்ட தீப்பெட்டி மத்தாப்பு ரக பட்டாசுகளை கடையில் இறக்கிவைத்தனர். அப்போது உராய்வால் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. கண்ணி மைக்கும் நேரத்துக்குள் கடைகளில் இருந்த பட்டாசுகள் அனைத்தும் ஒரே நேரத்தில் வெடித்து சிதறத் தொடங்கின.
பேன்ஸி ரக பட்டாசுகள் நாலாபுறமும் வெடித்து 50 மீட்டர் தொலைவுக்கும் அப்பால் விழுந்தன. மேலும் பட்டாசு கடையில் பற்றிய தீயின் வேகம் சாலையின் எதிரில் உள்ள கட்டிடங்கள் மற்றும் வாகனங்களையும் விட்டுவைக்கவில்லை. அந்தப் பகுதியில் இருந்த 300க்கும் மேற்பட்டோர் ஓடிச் சென்று தப்பினர். விபத்தில் பட்டாசு கடை முழுவதும் எரிந்து சாம்பலானது.
தீக்குச்சி மத்தாப்புகளை ஏற்றி வந்த 2 வேன்களும் தீப்பற்றி எரிந்து கருகின. தீயுடன் கரும்புகை அருகே உள்ள தனியார் ஸ்கேன் மையம் உள்ளிட்ட பல கட்டிடங்களை சூழ்ந்தது. திடீர் பட்டாசு சத்தம் மற்றும் புகைமூட்டத்தால் ஸ்கேன் மையத்தில் இருந்தவர்கள் தப்பிக்க முடியாமல் கூச்சலிட்டு கதறினர். பலரும் பாதுகாப்பு தேடி ஸ்கேன் மையத்துக்குள் ஓடினர். பின்பக்கம் வழி ஏதும் இல்லாததால், ஸ்கேன் மையத்தில் இருந்த 15க்கும் மேற்பட்டோர் எங்கும் செல்ல முடியாமல் சிக்கித் தவித்தனர். பின்னர் அவர்கள் கரும்புகையால் மூச்சுத்திணறி மயக்கமடைந்தனர்.
தீயணைப்பு வீரர்கள் 50க்கும் மேற்பட்டோர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர். பொதுமக்கள் உதவியுடன் ஸ்கேன் மையத்தின் பின்பக்க ஜன்னலை உடைத்து உள்ளே மயங்கிக் கிடந்தவர்கள் மீட்கப்பட்டு, ஆம்புலன்ஸ் மூலம் சிவகாசி அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
ஸ்கேன் மையத்தின் மேலாளர் சிவகாசி வெங்கடாச்சலபுரத்தைச் சேர்ந்த பாஸ்கர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். டைப்பிஸ்ட்களாக பணிபுரிந்த சிவகாசி காந்திநகரைச் சேர்ந்த கோபிநாத் மகள் வளர்மதி, மணிநகரைச் சேர்ந்த பழனிச்சாமி மனைவி பத்மலதா, செவிலியர்கள் ரிசர்வ் லைன் அருணாச்சலம் மகள் காமாட்சி, தாயில்பட்டியைச் சேர்ந்த மைக்கேல் மனைவி புஷ்பலட்சுமி மற்றும் பரிசோதனைக்காகவும், உதவிக்காகவும் மையத்துக்கு வந்திருந்த திருத்தங்கல் செங்கமலநாச்சியார்புரம் ஹரிராம் மனைவி சொர்ணகுமாரி, சண்முக ராஜ் மனைவி தேவி, சொக்கலிங்கபுரம் ராஜா ஆகியோர் சிவகாசி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர். இதில் தேவி 3 மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.
ஸ்கேன் மையத்தில் இருந்த மருத்துவர் ஜானகிராமன்,40 எஸ்.என்.புரம் சண்முகராஜன், மேலபழையாபுரம் கணேசன் ஆகியோர் மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டனர். ஜானகிராமன் மதுரை அரசு மருத்துவமனையிலும், மற்றவர்கள் சிவகாசி அரசு மருத்துவமனையிலும் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
இந்த நிலையில் மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மருத்துவர் ஜானகிராமன் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
தீ விபத்தில் பாதிக்கப்பட்ட ஸ்கேன் மைய ஊழியர்கள் முத்துப்பிரியா, சுமதி, காளியம்மாள், மாரீஸ்வரி மற்றும் சுப்பு லட்சுமி, மகேஸ்வரி, சரண்யா, லட்சுமி, கருப்பாயி அம்மாள், இசக்கியம்மாள், சுப்பிரமணி, தெய்வமலர், ராக்கப்பன் ஆகியோர் பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட தீ விபத்தால் காயமடைந்து சிவகாசியில் உள்ள பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெற்றுவருபவர்களில் சிலரது நிலை கவலைகிக்கிடமாக உள்ளதால் உயிரிப்பு மேலும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.