அமரர் ஆன அம்மா... பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் கண்ணீர் அஞ்சலி
உடல்நலக்குறைவால் மரணமடைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் மாணவ, மாணவிகள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
சென்னை: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5ம் தேதி இரவு 11.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் காலமானார். அவரது மறைவு தமிழக மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.
ஜெயலலிதா மறைவை ஓட்டி டிசம்பர் 6ம் தேதி ஒரு நாள் பொதுவிடுமுறை விடப்பட்டது. 7 நாட்கள் அரசு சார்பில் அரசு சார்பில் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
ஜெயலலிதா மறைவையொட்டி பள்ளி, கல்லூரிகளுக்கு கடந்த டிசம்பர் 6ஆம் தேதி முதல் டிசம்பர் 8ம் தேதி வரை மூன்று நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனையடுத்து, மூன்று நாட்கள் விடுமுறைக்கு பின்னர் இன்று பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டன
ஜெயலலிதாவிற்கு அஞ்சலி
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உடல், சென்னை மெரினாவில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் நினைவிடம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றனர். நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் அவரது சமாதியில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
பள்ளிக்கல்வித்துறை அஞ்சலி
இந்நிலையில், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு பள்ளிகளில் இன்று அஞ்சலி செலுத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டிருந்தது. அதன்படி இன்று காலையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பங்கேற்றனர்.
மாணவர்கள் அஞ்சலி
முதல்வர் ஜெயலலிதா படித்த சென்னை சர்ச் பார்க் கான்வென்ட் பள்ளியில் அவரது உருவ படத்தின் முன் மெழுகுவர்த்தி ஏந்தி மாணவிகளும், ஆசிரியர்களும்அஞ்சலி செலுத்தினர். தமிழகம் முழுவதும், பள்ளி, கல்லூரிகளில் ஜெயலலிதா மறைவிற்கு இரங்கல் தெரிவித்து மாணவர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
ஜெயலலிதா நினைவுகள்
தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச பொருட்களில் அனைத்திலுமே ஜெயலலிதாவின் உருவப்படம் உள்ளது. நோட்டு புத்தகங்கள், பை, லேப்டாப், சைக்கிள் என எண்ணற்ற பொருட்களை மாணவர்களுக்கு அரசு சார்பில் அளிக்கப்படுகிறது. மாணவர்களுக்கு பிடித்த முதல்வர் ஜெயலலிதா மறைந்து விட்டார் என்று அஞ்சலி நிகழ்ச்சியில் பலரும் தெரிவித்தனர்.