பள்ளி செல்ல மறுத்து தூக்குப் போட்டுக் கொண்ட மாணவி... சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் பள்ளி செல்ல மறுத்து தற்கொலைக்கு முயன்ற மாணவி, சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் பரிதாபமாக உயிரிழந்தார்.
திண்டுக்கல் நாகல்நகர் பாரதிநகரை சேர்ந்தவர் செந்தில் என்பவருடைய மகள் தயாவதி (12). இவர் திண்டுக்கல்லில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 9ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 1ம் தேதி காலையில் பள்ளிக்குச் செல்ல மறுத்துள்ளார் தயாவதி.
ஆனால், அவருடைய தாயார் அவரை பள்ளிக்குச் செல்ல வற்புறுத்தியுள்ளார். இதனால் மனமுடைந்த தயாவதி, தாயார் வெளியில் சென்றிருந்த நேரத்தில் சுடிதார் துப்பட்டாவால் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றார்.
சிறிதுநேரத்திற்குப் பின்னர் வீடு திரும்பிய தாயார், தயாவதி தூக்கில் தொங்குவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அக்கம்பக்கத்தார் உதவியுடன் தயாவதியை திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். பின்னர், அவர் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
கடந்த 4 நாட்களாக தயாவதிக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு சிகிச்சைப் பலனின்றி தயாவதி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து திண்டுக்கல் தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.