கையில் மருதாணி போட்டது குற்றமாம்... 2ம் வகுப்பு மாணவனுக்கு ரூ. 500 அபராதம் விதித்த பள்ளி
சென்னை: கையில் மருதாணி வைத்து பள்ளிக்கு வந்ததாக இரண்டாம் வகுப்பு மாணவனுக்கு பள்ளி நிர்வாகம் ரூ.500 அபராதம் விதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆங்கில மோகம், தேர்ச்சி விகிதம் போன்றவற்றால் அரசு பள்ளிகளை விட தனியார் பள்ளிகளின் மீதே பெற்றோர்களுக்கு மோகம் அதிகமாக உள்ளது. இதனை தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்டு, பல்வேறு கட்டுப்பாடுகளை அவை விதிக்கின்றன, அதிகப்படியான கட்டணத்தையும் வசூலிக்கின்றன.
இந்நிலையில், சென்னை வேப்பேரியில் இயங்கி வரும் தனியார் பள்ளி ஒன்று, பள்ளிக்கு மருதாணி அணிந்து வந்ததற்காக 2ம் வகுப்பு மாணவனுக்கு ரூ. 500 அபராதம் விதித்து சர்ச்சையில் சிக்கியுள்ளது.
சம்பந்தப்பட்ட 7 வயது சிறுவனின் தந்தை ஜெயக்குமார், அரசு ஊழியர். அவர்களது வீட்டில் கடந்த மாதம் 23ம் தேதி குடும்ப விழா ஒன்று நடந்துள்ளது. அப்போது பள்ளி காலாண்டு விடுமுறையில் இருந்த அச்சிறுவன், கையில் மருதாணி வைத்துள்ளான்.
கடந்த 5ம் தேதி விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. அப்போது அச்சிறுவனும் பள்ளிக்குச் சென்றுள்ளான். சுமார் பத்து நாட்களானதால், அவன் கையில் இருந்த மருதாணி அழிந்து லேசாக இருந்துள்ளது.
இதைப் பார்த்து அச்சிறுவனுக்கு பள்ளி நிர்வாகம் ரூ. 500 அபராதம் விதித்துள்ளது. அபராதப் பணத்தைக் கட்டினால் மட்டுமே அச்சிறுவன் பள்ளிக்கு வர வேண்டும் எனவும் கூறப்பட்டது.
முதலில் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த அச்சிறுவனின் தந்தை ஜெயக்குமார், பின்னர் அபராதப் பணத்தைக் கட்டி அதற்காக ரசீதையும் பெற்றுள்ளார். தற்போது அந்த ரசீது வாட்ஸ் அப்-களில் வளைய வந்து கொண்டிருக்கிறது.
மருதாணி வைப்பது அழகிற்காக மட்டுமல்ல, நகச்சுற்று போன்ற பாதிப்புகள் வராமல் நகத்தைக் காக்கும் பாதுகாப்பு அம்சமும் ஆகும். அதிலிலும் சிறு குழந்தைகளுக்கு மருதாணி வைப்பது மிகவும் பிடித்தமான ஒன்றாகும். அப்படி இருக்கையில் மருதாணி வைத்ததைப் பெரும் குற்றமாகக் கருதி, பள்ளி நிர்வாகம் அபராதம் விதித்தது பெற்றோர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.