கதிராமங்கலத்தில் கறுப்புத் துணியால் வாயைக் கட்டி சிறுவர் சிறுமியர் போராட்டம்… மனம் இறங்குமா அரசு
ஓஎன்ஜிசிக்கு எதிராக கதிராமங்கலம் கிராமத்தில் நடைபெற்று வரும் போராட்டத்தில் சிறுவர் சிறுமியர் பள்ளிச் சீருடையுடன் கறுப்புத் துணியை வாயில் கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சை: கதிராமங்கலத்தில் சிறுவர் சிறுமியர் வாயில் கறுப்புத் துணியைக் கட்டிக் கொண்டு ஓஎன்ஜிசிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தஞ்சை மாவட்டம் கதிராமங்கலத்தில் 11 இடங்களில் எண்ணெய் கிணறு அமைத்து கச்சா எண்ணெய் எடுக்கிறது ஓஎன்ஜிசி. கடந்த 30 ஆம் தேதி விளைநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள எண்ணெய் குழாயில் திடீர் உடைப்பு ஏற்பட்டு கச்சா எண்ணெய் வெளியேறியது.
இதனால், பதற்றமடைந்த கிராமத்து மக்கள் அனைவரும் சம்பவ இடத்தில் குவிந்து போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். மேலும் 9 பேரை கைது செய்தனர்.
தொடரும் கடையடைப்பு
இதையடுத்து, கைது செய்தவர்களை விடுவிக்க கோரி கதிராமங்கலத்தில் வணிகர்கள் வெள்ளிக்கிழமை முதல் முழுகடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் விடுவிக்கும் வரை போராட்டம் தொடரும் என வணிகர்கள் அறிவித்துள்ளனர்.
மாணவர்கள் ஆதரவு
இந்த போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையில் பள்ளி மற்றும் கல்லூரி போராட்டத்தில் ஈடுபட்டனர். கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் வகுப்புக்களைப் புறக்கணித்து போராட்டம் நடத்தினர். அப்போது ஓஎன்ஜிசிக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
கறுப்புத் துணி கட்டி சிறுவர் போராட்டம்
பள்ளியில் படிக்கும் சிறுவர் சிறுமியரும் கதிராமங்கலம் போராட்டத்திற்கு ஆதரவாக களம் இறங்கியுள்ளனர். பள்ளிச் சீருடையோடு அவர்கள் வாயில் கருப்பு துணி கட்டிக் கொண்டு வீட்டில் இருந்து பேரணியாக புறப்பட்டு ஊர் எல்லைக்கு வந்து போராட்டத்தில் பங்கேற்றனர்.