கூடுதல் பள்ளிக்கட்டிடங்கள் கேட்டு நீலகிரி அருகே மாணவர்கள் சாலை மறியல்
நீலகிரி: நீலகிரி மாவட்டம் ஓவேலியில் அமைந்துள்ள பள்ளிக்கு கூடுதல் கட்டங்கள் கேட்டு பள்ளி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நீலகிரி மாவட்டம் ஓவேலி பகுதியில் ஏற்கனவே அடிப்படை வசதிகள் இன்மை, காடுகளின் பல்லுயிர்த்தன்மை அழிப்பு, வன பகுதிகள் ஆக்கிரமிப்பு போன்ற பல்வேறு பிரச்சனைக்களுக்காக அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர்.
இந்நிலையில் அங்கு அமைந்துள்ள அரசுப்பள்ளியில் சரியான கட்டிடங்கள் இல்லாததால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். மழை காலங்களில் இருக்கும் வகுப்பறைகள் மாணவர்களுக்கு போதுமானதாக இல்லை.
இதனையடுத்து, அப்பகுதி பள்ளி மாணவர்கள் கூடுதல் கட்டிடங்களின் கட்டுமானப் பணி விரைவில் தொடங்கவேண்டும் என்று கூறி இன்று காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஏற்கனவே, கடந்த நாடாளுமன்ற தேர்தலில், அடிப்படை வசதிகளுக்காக இப்பகுதி மக்கள் ஒட்டுமொத்தமாக தேர்தலை புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.