ஓடிப்போன ஆசிரியை-மாணவன் போலீசாரிடம் சிக்கினால் அடுத்து என்ன நடக்கும்? சட்டம் சொல்வதென்ன?
சென்னை: பள்ளி மாணவனுடன் மாயமான ஆசிரியையை தேடுவதற்கு போலீசார் தனிப்படை அமைத்துள்ள நிலையில், அந்த ஜோடிகள் போலீசாரிடம் சிக்கினால் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
கடையநல்லூரை சேர்ந்த 15 வயது மாணவருடன், 23வயது ஆசிரியை கோதை, எஸ்கேப் ஆன சம்பவம் தற்போது தமிழகமெங்கும் ஹாட்-டாக்காக மாறியுள்ளது.
மாணவனின் பெற்றோர், கடையநல்லூரிலும், ஆசிரியை தந்தை, செங்கோட்டை காவல் நிலையத்திலும் தங்கள் பிள்ளைகளை காணவில்லை என்று புகார் அளித்துள்ளனர். இதைத் தொடர்ந்து தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னையில்..
மாணவன் எடுத்துச் சென்ற செல்போன், கோதை செல்போன் ஆகியவை சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளன. மாணவன் கடைசியாக சென்னையில் ஏடிஎம் கார்டை பயன்படுத்தியது போலீசாரால் டிரேஸ் செய்யப்பட்டுள்ளது. எப்படியும், விரைவில் இருவரையும் பிடித்துவிடுவோம் என்று நம்பிக்கை தெரிவிக்கிறது காவல்துறை. ஓ.கே.அப்படியே இருவரையும் பிடித்துவிட்டால் அடுத்ததாக என்ன நடக்கும்.
காதலர்கள் மன்றாடுவார்கள்
நாங்கள் புனிதமான காதலர்கள்..நாங்கள் பிரிந்து வாழுவது இயலாத காரியம்..ஒருவர் மீது ஒருவர் அன்பை கொட்டி வைத்துள்ளோம்.. என்பது போன்ற டயலாக்குகள், இருவர் வாயிலிருந்தும் வரலாம். ஆனால், இதெல்லாம், சட்டத்தின் முன்பு செல்லாது என்பதுதான் நிதர்சனம்.
ஆசிரியை மீது வழக்குகள் பாயும்
ஒரு வருடத்துக்கு முன்பு, 16 வயது மாணவனுடன், பெங்களூரு ஓடி வந்த மும்பை ஆசிரியை வழக்கில் என்ன நடந்ததோ, அதுவேதான், கோதை விவகாரத்திலும் நடக்கும். ஆசிரியை மீது, போலீசார் முக்கியமாக இரு பிரிவுகளில் வழக்கு தொடர வாய்ப்புள்ளது. ஒன்று ஐ.பி.சி பிரிவு 365 மற்றொன்று, பாலியல் பலாத்காரத்தில் இருந்து குழந்தைகளை காக்கும் சட்டம் (போஸ்கோ).
போஸ்கோ சொல்வதென்ன..
பாலியல் தொடர்பான பிரச்சினையில் 18 வயதுக்கு கீழுள்ள சிறுவனோ, சிறுமியோ பாதிக்கப்பட்டால் போஸ்கோ சட்டத்தை கண்டிப்பாக குற்றவாளி மீது பாய்க்க வேண்டும் என்கிறது, 2012ல் இயற்றப்பட்ட இந்த மத்திய அரசு சட்டம். இந்த சட்டப்படி, பாதிக்கப்பட்ட சிறாரின் அடையாளங்கள் வெளியுலகத்திற்கு காட்டப்படக் கூடாது. அதிகபட்சம் ஒரு வருடத்திற்குள் வழக்கை விசாரித்து முடிக்க வேண்டும். போஸ்கோ சட்டத்தில் பல பிரிவுகள் உள்ளன. வலுக்கட்டாய உடலுறவு, சம்மத்ததுடன் கூடிய உறவு போன்றவை அடிப்படையில் பிரிவுகள் மாறுபடும். தண்டனையும் மாறுபடும்.
7 ஆண்டுகள் சிறை
நெல்லை சம்பவத்தில், போஸ்கோ சட்டம் பயன்படுத்தப்பட்டால், குற்றத்தின் தன்மையை கருத்தில் கொண்டு அதிகபட்சம் 5 அல்லது 7 ஆண்டுகள் சிறை தண்டனை தரமுடியும். போலீசார் பயன்படுத்தும் சட்டப் பிரிவு இதில் முக்கியத்துவம் வாய்ந்தது. போஸ்கோ தவிர்த்து மற்றொரு சட்டப்பிரிவான 365 ஐ.பி.சி என்பது, கடத்தல் மற்றும் தீய நோக்கத்திற்கானது. மும்பை ஆசிரியை வழக்கில், மராட்டிய போலீசார், இந்த பிரிவை பயன்படுத்தியுள்ளனர். இதில், அதிகபட்சம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்க முடியும்.
கடத்தல் வழக்கு
பரஸ்பர சம்மதத்துடன் ஓடிப்போனது விசாரணையில் உறுதியானாலும், ஓடிப்போனது சிறுவன் என்பதால், அது கடத்தலாகவே பார்க்கப்படும். அதேநேரம், சிறுவன் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பப்படுவான். போஸ்கோ சட்டத்தை பாய்க்க, வயது வரம்பை, மத்திய அமைச்சரவை 16ஆக குறைத்துள்ளது. ஆனால், கடையநல்லூர் சிறுவனுக்கு 15 வயதுதான் ஆகிறது என்பதால் கடத்தல் வழக்குடன் போஸ்கோ பிரிவின் கீழான வழக்கும் ஆசிரியை கோதை மீது பாயும்.
ஆசிரியைக்கு முழு பாதிப்பு
எப்படிப் பார்த்தாலும், இந்த சம்பவத்தில் முழுக்க பாதிக்கப்படுவது ஆசிரியை கோதைதான். அவருக்கு 23 வயதாகியுள்ளதால், சட்டப்படி அவர் முழு முதிர்ச்சியுடைய நபராகிவிடுகிறார். எனவே, குற்றத்திற்கான முழு பொறுப்பும் அவர் தோள்மீதே இறக்கி வைக்கப்படும். அதிலும், புனிதமான ஆசிரியை வேலையில் இருந்தபடி, இந்த செயலை செய்ததால், கோர்ட்டிலும், கோதை தரப்பு வாதம், எதிர்தரப்பால் கடும் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்படும்.
இப்படி நடந்துவிட்டால்..
ஒருவேளை, ஆசிரியை, மாணவன் ஆகிய இருவரும், தாங்கள், வேறு ஏதோ காரணத்துக்காக, தனித்தனியாக ஓடிப்போனதாக காண்பித்துக் கொண்டால் மட்டுமே அத்தனை சட்டப் பிரச்சினைகளில் இருந்தும் ஆசிரியை தப்பிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.