பெரிய விடுமுறைக்குப் பின்னர் நாளை திறக்கப்படும் பள்ளிகள்.. மருந்தடித்து ஆயத்த நிலையில்!
சென்னை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் தொடர் கன மழை காரணமாக 2 வாரங்களுக்கு மேல் விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில் இந்த மூன்று மாவட்டங்களிலும் நாளை பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படுகின்றன.
பள்ளிகள் மிகப் பெரிய இடைவெளிக்குப் பின்னர் திறக்கப்படுவதால் பள்ளியை முழுமையாக சுத்தப்படுத்தி, மின்சார சுவிட்சுகள் உள்ளிட்டவை சரியாக இருக்கிறதா என்ற பரிசோதித்தலில் பல பள்ளிகள் இன்று ஈடுபட்டன.
பெரும்பாலான பள்ளிகள் ஆயத்த நிலையில் இருந்தாலும், சென்னையில் பல பள்ளிகளில் இன்னும் தஞ்சமடைந்து தங்கியுள்ள மக்கள் வெளியேறாமல் உள்ளதால் அவை திறக்கப்படுமா என்பதில் சந்தேகம் நிலவுகிறது.
நவம்பர் 9 முதல்
நவம்பர் 9ம் தேதி முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டப் பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன. தொடர்ந்து கன மழை பெய்து வந்ததாலும், ஊரே வெள்ளக்காடாகி விட்டதாலும் அடுத்தடுத்து விடுமுறை விடும் நிலை ஏற்பட்டு விட்டது.
பள்ளிகளில் தஞ்சமடைந்த மக்கள்
மேலும் பல பள்ளிகளில் வெள்ளம் பாதித்த பகுதிகளைச் சேர்ந்த மக்கள் தஞ்சமடைந்து தங்கியுள்ளனர். இதனால் இந்தப் பள்ளிகளைத் திறக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இன்று ரெஸ்ட்
நேற்றே இந்த மாவட்டங்களில் மழை நின்று விட்டது. இருப்பினும் ஈரமாக உள்ள நிலையில் அவை சற்று உலரட்டும் என்பதோடு பள்ளிகளில் மின்சார சுவிட்சுகள் போன்றவை சரியான முறையில் உள்ளதா என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை உறுதி செய்து கொள்ள அவகாசம் தரும் வகையில் இன்றும் விடுமுறை விடப்பட்டது.
மருந்தடிப்பு
இதையடுத்து நாளை திறக்கப்படவுள்ள அரசுப் பள்ளிகள், தனியார் பள்ளிகளில் மருந்துகள் அடித்தும், பாடப் புத்தகம் தேவைப்படுவோருக்கு அவற்றை வழங்கும் வகையில் அவற்றை தயார் நிலையில் வைக்கவும், வகுப்பறை சுவிட்சுகள் உள்ளிட்டவற்றை பரிசோதிக்கவும் இன்றைய நாளை பயன்படுத்திக் கொண்டன பள்ளிக்கூடங்கள்.
மீண்டும் விடுமுறை வரும்?
இதற்கிடையே, தமிழகத்தில் மீண்டும் கன மழை தொடரும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. எனவே திறக்கப்படும் பள்ளிகள் விரைவிலேயே மீண்டும் மழை காரணமாக மூடப்படலாம் என்ற எதி்ர்பார்ப்பும் (மாணவர்களிடையே) உள்ளது.!