2 வார விடுமுறைக்குப் பின் சென்னை, காஞ்சி, திருவள்ளூர் மாவட்ட பள்ளிகள் திறக்கப்பட்டன
சென்னை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பெய்து வந்த தொடர் மழை காரணமாக மூடப்பட்ட பள்ளி கல்லூரிகள் இன்று திறக்கப்பட்டன.
இந்த நிலையில் மழை வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான 30,000 மாணவர்களுக்கு இலவச புத்தகங்கள், நோட்டுகள் வழங்கும் பணி நேற்று தொடங்கியுள்ளது.
வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்தது. தூத்துக்குடியையும் மழை ஆட்டுவித்தது. நகரமே மூழ்கியது. இதனால் ஏராளமான வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. ஏராளமான வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் பல மாணவ மாணவிகளின் பாடப்புத்தகங்கள் நனைந்தும், வெள்ளத்தில் அடித்தும் செல்லப்பட்டன.
இலவச புத்தகங்கள்
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மாணவ மாணவிகளுக்கும் பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், ஒரு செட் சீருடை ஆகியவற்றை இலவசமாக வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார்.
விநியோகம்
இதைத் தொடர்ந்து பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா உத்தரவுப்படி பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து மாணவ மாணவிகளுக்கும் பாடப்புத்தகங்கள், நோட்டுபுத்தகங்கள், சீருடைகள் அனைத்தும் வழங்க அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் உத்தரவிட்டார். இப்பணி நேற்று தொடங்கியது.
கடலூரில்
கடலூர் மாவட்டத்தில் நேற்று அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து அங்கு மட்டும் 10,831 மாணவ மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள், நோட்டுகள், சீருடைகள் வழங்கப்பட்டன.
இன்று முதல் சென்னை உள்பட 3 மாவட்டங்களில்
இதேபோல சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் மழையினால் பாடப்புத்தகங்களை இழந்த மாணவ மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், சீருடைகள் ஆகியவற்றை வழங்கவுள்ளனர்.
வகுப்பு ஆசிரியரிடம் தெரிவிக்க வேண்டும்
சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில்தான் மழை வெள்ளத்தால் மாணவ மாணவிகள் புத்தகங்களை இழந்துள்ளனர். மற்ற மாவட்டங்களில் பாடப்புத்தகங்களை இழந்திருந்தால் அவர்கள் தங்களுடைய வகுப்பு ஆசிரியரிடம் தெரிவிக்கவேண்டும்.
துல்லியமாகத் தெரியவில்லை
சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் எவ்வளவு பாடப்புத்தகங்கள் தேவை என்று துல்லியமாக தெரியவில்லையாம். காரணம், இன்றுதான் இங்கு பள்ளிகள் திறக்கப்படவுள்ளது என்பதால்.
தோராயமாக
சென்னை மாவட்டத்தில் 12 ஆயிரத்து 619 பேருக்கும், காஞ்சீபுரம் மாவட்டத்தில் 1123 பேருக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 2 ஆயிரத்து 591 பேருக்கும் தேவை என்று கணக்கு எடுக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், பள்ளிக்கூடங்கள் திறந்த பின்னர் சரியா்ன விவரம் தெரிய வரும்.
இன்று திறப்பு
இந்த நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் சில அரசுப் பள்ளிகளைத் தவிர மற்ற பள்ளிகளும், கல்லூரிகளும் இன்று திறக்கப்பட்டுள்ளன. மாணவர்களில் பலர் உற்சாகமாகவும், சிலர் அடடா திறந்துட்டாங்களே என்ற சோகத்துடனும் பள்ளிக்கு வந்ததைக் காண முடிந்தது.