என்ன செய்றதுன்னே தெரியலை.. நெல்லையில் 100 டிகிரி வெயில்.. புலம்பும் மக்கள்!
திருநெல்வேலி: நெல்லையில் வெயில் வறுத்தெடுத்து வருகிறதாம். 100 டிகிரி அளவுக்கு வெயில் வெளுத்தெடுப்பதால் மக்கள் அனலிலும், வியர்வையிலும் நெளிந்து கொண்டிருக்கிறார்களாம்.
கத்திரி என்படும் அக்னி நட்சத்திர வெயில் இன்று தொடங்கி விட்டது. இன்று தமிழகத்திலும், புதுவையிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனாலும் சென்னையிலும் பிற பகுதிகளிலும் பரவலாக வெயில் வெளுத்தெடுத்து வருகிறது. சில பகுதிகளில் மழை பெய்துள்ளது.
இந்த நிலையில் நெல்லையில் கடந்த சில நாட்களாகவே வெயில் வெளுத்து வருகிறது. கடுமையான வெயிலில் சிக்கி நெல்லை மக்கள் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.
ஒரு வாரமாக
கடந்த ஒரு வாரமாகவே விடாமல் தொடர்ந்து 100 டிகிரி வெயிலை நெல்லை மக்கள் சந்தித்து வருகின்றனர். இதனால் கடும் வெப்பம் அடிக்கிறது. வயதானவர்கள், குழந்தைகளால் தாங்க முடியவில்லை.
இன்று ஆரம்பமே அட்டகாசம்
கத்திரி வெயில் தொடங்கிய இன்றும் கூட வெயில் வெளுத்தெடுத்து வருகிறது. இன்றும் 100 டிகிரியைத் தாண்டியுள்ளது வெயில். வெயில் தகிப்பதால் சாலையில் செல்வோர் அடடா என்று புலம்பியபடி சென்றனர்.
இளநீர் கொடுப்பா
வெயில் கொடுமை தாங்க முடியாததால் குளிர்பானம் சாப்பிடவும், மோர், தயிர் சாப்பிடவும், இளநீர் சாப்பிடவும், நுங்கு சாப்பிடவும், தர்ப்பூசணி போன்றவற்றை சாப்பிடவும், கரும்பு ஜூஸ் சாப்பிடவும் மக்கள் அலை மோதியதைப் பார்க்க முடிந்து.
அனல் காற்று
நெல்லையில் வெயில் அதிகமாக இருப்பதால் பகல் நேரத்தில் அனல் காற்றையும் மக்கள் அனுபவிக்கின்றனர். வெளியில் தலை காட்ட முடியாத நிலை. வீட்டுக்குள்ளும் வெக்கை அதிகம்.
கத்திரியிலிருந்து தப்பிக்க
கத்திரி வெயில் வேறு இன்று தொடங்கியுள்ளதால் இந்த கடுமையான வெப்பத்திலிருந்து தப்புவதற்கான வழிமுறைகளை மருத்துவர்கள் ஏற்கனவே முன்னுரைத்துள்ளனர்.