சின்னத்திரை நடிகர் சங்கத்துக்கு டிச.13-ல் மீண்டும் தேர்தல்: வேட்பாளர் பட்டியல் வெளியீடு !
சென்னை: சின்னத்திரை நடிகர் சங்கத்திற்கு டிசம்பர் 13ம் தேதி மீண்டும் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்பாளர் பட்டியல் நேற்று இறுதி செய்யப்பட்டது.
சின்னத்திரை நடிகர் சங்க தேர்தல், 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறுவது வழக்கம். தலைவராக இருந்த ராஜேந்திரன் மற்றும் நிர்வாகிகளின் பதவிக்காலம் முடிவுக்கு வந்ததை அடுத்து 2014-2017ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்றது. 1,300 உறுப்பினர்கள் கொண்ட இந்த சங்கத்தில், 700க்கு மேற்பட்ட நடிகர், நடிகைகள் வாக்களித்தனர்.
இதில் நளினி வெற்றி பெற்று தலைவியாக கடந்த ஆண்டு பொறுப்பேற்றார். இந்தச் சங்கத்துக்கு தேர்தல் நடந்து இன்னும் ஒரு ஆண்டு கூட முடிவடையாத நிலையில் மீண்டும் தேர்தல் வருவதற்கு தலைவி நளினியே காரணம் என்கின்றனர். நளினி நடிப்புக்குதான் முக்கியத்துவம் கொடுக்கிறார். சங்க பிரச்னைகளுக்கு முக்கியத்தும் தருவதில்லை என்றும், தன்னிச்சையாக முடிவெடுக்கிறார் என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.
அவரது நடவடிக்கைகளில் அதிருப்தி அடைந்த சங்கத்தின் பொருளாளர் வி.டி.தினகர், துணைத் தலைவர் ராஜ்காந்த், இணை செயலாளர்கள் பாபூஸ், கன்யா பாரதி, மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் 16 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். அனைத்து நிர்வாகிகளும் ராஜினாமா செய்தனர். வேறு வழி இல்லாமல் நளினியும் ராஜினாமா செய்தார்.
இதனையடுத்து சிறப்பு பொதுக்குழு கூட்டம் கடந்த 2014 ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்றது. அப்போது சின்னத்திரை நடிகர் சங்கத்திற்கு டிசம்பர் 13ம் தேதி மீண்டும் தேர்தல் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் நேற்று வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டது. இந்தத் தேர்தலில் 3 அணியினருக்கிடையே போட்டி நிலவுகிறது. பானுபிரகாஷ், மனோபாலா, டெல்லிகணேஷ் ஆகியோர் ஒரு அணியாகவும், சிவன் சீனிவாசன், போஸ் வெங்கட் ஆகியோர் மற்றொரு அணியாகவும் போட்டியிடுகின்றனர்.
ரவிவர்மா, கனகப்பிரியா ஆகியோர் மற்றொரு அணியாக தேர்தலைச் சந்திக்கின்றனர்.1,300 உறுப்பினர்களைக் கொண்ட சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தல் விருகம்பாக்கத்தில் உள்ள ஏ.கே.ஆர். மகாலில் டிசம்பர் 13 ம் தேதி நடைபெறவுள்ளது. சமீபத்தில் தான் சட்டமன்ற தேர்தலை மிஞ்சும் அளவுக்கு பரபரப்பாக நடிகர் சங்க தேர்தல் நடந்து முடிந்தது.
இந்த நிலையில் தலைமை மீது ஏற்பட்ட அதிர்ப்தியின் காரணத்தால் சின்னத்திரை நடிகர் சங்கத்திற்கு மீண்டும் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த முறையவது சரியான தலைமையைத் தேர்வு செய்வார்களா என்பது டிவி ரசிகர்களின் கேள்வியாகும்.