கேபிள் டிவி ஒளிபரப்பில்... அஸ்தமனமாகிறது சன் டிவியின் எஸ்.சி.வி!
சென்னை: சன் குழுமத்தின் கல் கேபிள்ஸின் உரிமத்தை மத்திய அரசு அதிரடியாக ரத்து செய்திருப்பதன் மூலம் தமிழகத்தில் கேபிள் டிவி ஒளிபரப்பில் கோலோச்சிக் கொண்டிருந்த எஸ்.சி.வி. நிறுவனத்தின் ஆதிக்கம் முடிவுக்கு வருகிறது.
தமிழகத்தில் புதிதாக தொலைக்காட்சி நிறுவனத்தை தொடங்க வருவோரை கிலி கொள்ள வைத்த பெயர்தான் எஸ்.சி.வி. தற்போது மத்திய அரசு உரிமத்தை அதிரடியாக ரத்து செய்திருக்கும் சன் குழுமத்தின் கல் கேபிள்ஸின் கீழ் செயல்படுகிறது எஸ்.சி.வி.
எஸ்.சி.வி.தான் தமிழகம் முழுவதும் கேபிள் ஒளிபரப்பு உரிமையை வைத்திருந்தது. இதன் மூலம் சன் டிவி குழும சேனல்கள் மட்டும்தான் ப்ரைம் அலைவரிசைகளில் ஒளிபரப்பட்டன. பிற டிவிகள் எந்த அலைவரிசையில் இருக்கிறது என்பதே தெரியாமல் இருந்தன. இதனால் டிவி என்றாலே சன் டிவிதான் என்ற நிலை தமிழகத்தில் வேரூன்றிப் போயிருந்தது.
எஸ்.சி.வி. தயவில்தான்..
சன் டிவிக்கு போட்டியாக வந்த டிவி நிறுவனங்களும் கூட கேபிள் ஒளிபரப்புக்காக அதன் எஸ்.சி.வி.யிடம்தான் கெஞ்ச வேண்டியிருந்தது. எஸ்.சி.வி.க்கு போட்டியாக கேபிள் தொழிலில் கால் பதித்த நிறுவனங்களின் கேபிள்கள் இரவோடு இரவாக துண்டிக்கப்பட்ட சம்பவங்கள் அன்றும் இன்றும் நடைபெறுகிற ஒன்றாகத்தான் இருக்கிறது.
கிடப்பில்..
பின்னர் கண்கள் பணிக்க இரு குடும்பமும் இணைய அந்த முயற்சி கைவிடப்பட்டது. இதனால் எஸ்.சி.வி. நிறுவனம் கேபிள் ஒளிபரப்பில் ஏகபோக சக்கரவர்த்தியாக கொடிகட்டிப் பறந்தது.
உள்ளூர் சேனல்கள்..
அத்துடன் உள்ளூர்களில் ஏகப்பட்ட சேனல்களை ஒளிபரப்பிக் கொள்ளவும் எஸ்.சி.வி.அனுமதி அளித்தது. எஸ்.சி.வி. குழுமத்துக்கு ஒரு குறிப்பிட்ட கட்டணத்தை செலுத்திவிட்டு செய்தி சேனல் முதல் அனைத்து சேனல்களையும் ஒளிபரப்பலாம் என்ற நிலையும் உருவானது.
ஒழுங்குபடுத்துதல்
இந்த நிலையில் அதிமுக அரசு வந்தவுடன் எஸ்.சி.வி.யின் ஏகபோகத்துக்கு அதிரடியாக முற்றுப்புள்ளி வைக்கும் நடவடிக்கைகள் தொடங்கின. உள்ளூர் சேனல்கள் ஏராளமானவை முடக்கப்பட்டு ஒழுங்குபடுத்தப்பட்டன.
தமிழக அரசு கேபிள்
தமிழக அரசும் கேபிள் ஒளிபரப்பில் இறங்கியது. ஆனாலும் எஸ்.சி.வியின் ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டுவர முடியாத ஒன்றாக இருந்தது.
அடாவடி
சன் குழுமத்துக்கு போட்டியாக வந்த புதிய தொலைக்காட்சி ஒன்றை முடக்கும் வகையில் எஸ்.சி.வி. நிறுவனம் இரு மடங்கு கட்டணம் கேட்கப் போய் பெரும் பஞ்சாயத்தே அண்மையில் வெடித்ததும் குறிப்பிடத்தக்கது.
கல் கேபிள்ஸ் உரிமம் ரத்து
இந்த நிலையின் எஸ்.சி.வி. இயங்குவதற்கு ஆதாரமான கல் கேபிள்ஸின் உரிமத்தை மத்திய அரசு அதிரடியாக ரத்து செய்துள்ளது. இதன் மூலம் கடந்த பல ஆண்டுகளாக கேபிள் ஒளிபரப்பில் கோலோச்சிக் கொண்டிருந்த எஸ்.சி.வி.யின் ஆதிக்கம் முடிவுக்கு வந்துவிட்டது.
நிதி இழப்பு
அதே நேரத்தில் இந்த உரிமம் ரத்தால் சன் டிவிக்கு நிதி இழப்பு என்பது பெரிதாக இல்லை என்றும் கூறுகின்றது சன் தரப்பு. சென்னையைப் பொறுத்தவரையில் எஸ்.சி.வி. சந்தாதாரர்களிடம் கட்டணம் வசூலிப்பதில்லை. பிற நகரங்களில்தான் வசூலிக்கிறது.
1.5 லட்சம் சந்தாதாரர்கள்
எஸ்.சி.வியின் சந்தாதாரர்கள் எண்ணிக்கை மொத்தமே 1.5 லட்சம் பேர். இதனால் எஸ்.சி.வி. மூலமான வசூல் இழப்பு என்பது சன் குழுமத்துக்கு பெரிய இழப்பு அல்லதான்.
குதூகலம்
ஆனால் பிற சேனல்களை உள்ளே வரவிடாமல் தடுத்து வைத்திருந்த அதன் ஏகபோகம் முடிவுக்கு வந்திருப்பது பிற தொலைக்காட்சி நிறுவனங்களையும் கேபிள் தொழிலில் ஈடுபட்டுள்ளோரையும் குதூகலப்படுத்தியிருக்கிறது.,