லோக் ஆயுக்தாவை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ கட்சி மனித சங்கிலி போராட்டம்
சென்னை: தமிழகத்தில் லோக் ஆயுக்தாவை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் இன்று மனித சங்கிலி போராட்டம் நடத்தப்பட்டது.
நாட்டில் பெருகிவரும் லஞ்சம், ஊழலை கட்டுப்படுத்தக் கோரியும், லோக் அயுக்தாவை தமிழக அரசு அமைக்கக் கோரியும் எஸ்.டி.பி.ஐ கட்சி மார்ச் 3 முதல் மார்ச் 20 வரை தமிழகம் முழுவதும் மக்கள் திரள் போராட்டத்தை நடத்துகிறது. அதன் ஒரு பகுதியாக இன்று தமிழகமெங்கும் மாவட்ட தலைநகரங்களிலும், முக்கிய பகுதிகளிலும் மனித சங்கிலி போராட்டத்தை நடத்தியது. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
சென்னையில் மெரினா கடற்கரை - காந்தி சிலை அருகே நடைபெற்ற மனித சங்கிலி போராட்டத்திற்க்கு எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம் தெகலான் பாகவி தலைமை தாங்கினார். மேலும் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில பொதுச்செயலாளர் பி.அப்துல் ஹமீது, மாநில செயலாளர்கள் ஏ.அமீர் ஹம்சா, காஞ்சி பிலால், வடசென்னை மாவட்ட தலைவர் முகம்மது ரஷீத், மத்திய சென்னை மாவட்டத் தலைவர் முகம்மது நாஸிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மனித சங்கிலி போராட்டத்துக்கு தலைமை வகித்த எஸ்.டி.பி.ஐ மாநிலத் தலைவர் பேசும்போது, அரசின் கடைநிலை ஊழியர் முதல், அரசு உயர் அதிகாரிகள் வரை மக்கள் சேவைக்காக லஞ்சம் பெறும் அவலங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. போக்குவரத்து துறை அலுவலகங்கள், காவல் நிலையங்கள், தாலுகா அலுவலகங்கள், கிராம நிர்வாக அலுவகங்கள் உள்ளிட்ட அரசு அலுவலகங்களிலும், உள்ளாட்சி அலுவலகங்களிலும், அரசு மருத்துவமனைகளிலும் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது.
இதேப்போன்று அரசின் திட்ட ஒதுக்கீடுகள், கனிம சுரங்கங்கள் ஒதுக்கீடு ஆகியவற்றிலும் பல ஆயிரம் கோடி ஊழல், முறைகேடுகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. நாட்டின் பொருளாதாரத்தையே சீர்குலைக்கும் இத்தகைய ஊழல் முறைகேடுகளே நாட்டின் முனேற்றத்துக்கும், வறுமையை ஒழிப்பதற்கும் முட்டுக்கட்டையாக இருக்கின்றன.
இந்த ஊழல் முறைகேடுகள் ஆளும் வர்க்கங்களின் துணையுடனேயே நடைபெறுவதால் இதனை விசாரிக்கும் புலனாய்வுத் துறையால் உண்மைகள் மறைக்கப்படும் சூழல் உருவாக்கப்பட்டு விடுகிறது. இத்தகைய ஊழல், முறைகேடுகள் அரசு நிர்வாகத்தின் தலையீடு இன்றி சுந்திரமாக விசாரிக்கப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டால் மட்டுமே மேற்கொண்டு இதுபோன்ற ஊழல் முறைகேடுகளை தடுக்க இயலும்.
கடந்த மத்திய காங்கிரஸ் ஆட்சியின் போது லோக்பால் மற்றும் லோக் அயுக்தா சட்டப் பிரிவு 63-இன் படி, 2014 ஜனவரியில் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன்மூலம் முதல் ஓர் ஆண்டுக்குள் அனைத்து மாநிலங்களிலும் லோக் அயுக்தா அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். ஆனால், தமிழகத்தில் லோக் அயுக்தா அமைப்பதற்கான நடவடிக்கைகள் இதுவரை எடுக்கப்படவில்லை. இது தொடர்பாக அரசுக்கு கோரிக்கை மூலமாகவும் ஆர்ப்பாட்டங்கள் வாயிலாகவும் எஸ்.டி.பி.ஐ கட்சி உட்பட பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கை விடுத்தும் தமிழக அரசு தரசு இதுத்தொடர்பான எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
ஆகவே தமிழகத்தில் புரையோடிப்போயுள்ள லஞ்சம் ஊழலை கட்டுப்படுத்த லோக் அயுக்தாவை நடைமுறைப்படுத்த வேண்டும். இதற்கான அழுத்தத்தை பொதுமக்கள் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கில் லஞ்சம், ஊழலை கட்டுப்படுத்தக் கோரியும், தமிழகத்தில் லோக் அயுக்தாவை அமைக்க வேண்டும் எனக்கோரி மார்ச் 03 முதல் மார்ச் 20 வரை மாபெரும் மக்கள் போராட்டத்தை எஸ்.டி.பி.ஐ கட்சி நடத்துகிறது. அதன் ஒருபகுதியாக இன்றைய தினம் தமிழகம் முழுவதும் மனித சங்கிலி போராட்டங்களை எஸ்.டி.பி.ஐ கட்சி நடத்தி வருகின்றது. இந்த போராட்டத்தின் தொடர்ச்சியாக வரும் மார்ச் 12 ஆம் தேதி ஆட்சியர், வட்டாட்சியர் அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டங்களையும், மார்ச் 20 ஆம் தேதி சென்னையில் தலைமைச் செயலகம் முற்றுகையிடும் போராட்டத்தையும், ஏப்ரல் 03 ஆம் தேதி புதுச்சேரியில் தலைமைச் செயலகம் முற்றுகையிடும் போராட்டத்தையும் எஸ்.டி.பி.ஐ கட்சி நடத்தவுள்ளது என்றார்.