கன்னியாகுமரி கடல் பகுதியில் மூழ்கியதா மாயமான விமானப்படை விமானம்?
சென்னை: கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி கடல் பகுதிகளில் மாயமான இந்திய விமானப்படைக்குச் சொந்தமான ஏஎன் 32 ரக விமானத்தைத் தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
சென்னை தாம்பரம் விமானப்படை தளத்திலிருந்து நேற்று 29 பேருடன் அந்தமானுக்கு இந்திய விமானப்படையின் ஏஎன் 32 ரக போக்குவரத்து விமானம் கிளம்பிச் சென்றது. ஆனால் நடுவானில் அது வங்கக் கடலுக்கு மேலே செல்லும்போது மாயமாகி விட்டது. அது கடலில் மூழ்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
இதையடுத்து விமானப்படை, கடற்படை விமானங்கள், கடலோரக் காவல் படையின் ஹெலிகாப்டர்கள் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளன. வங்கக்கடலின் எல்லையான கன்னியாகுமரி கடல் பகுதியிலும் விமானத்தை தேடும் பணியில் ஈடுபட மாநில கடலோர காவல்படை கூடுதல் ஏ.டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவிட்டார்.
அதன்படி இன்று கன்னியாகுமரி மாவட்ட கடலோர காவல்படை இன்ஸ்பெக்டர் சகாயஜோஸ் தலைமையில் 3 குழுவினர் அதி நவீன ரோந்து படகுகள் மூலம் கன்னியாகுமரி கடல் பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சின்னமுட்டம் கடலில் இருந்து கூடங்குளம் கடல் பரப்பு வரை ஒரு குழுவும், சின்னமுட்டத்தில் இருந்து சேரியாமுட்டம் வரை மற்றொரு குழுவும் சென்று தேடி வருகிறார்கள்.
3-வது குழு கடல் மணலில் செல்லும் வாகனம் மூலம் கன்னியாகுமரி கடற்கரை முழுவதும் சுற்றி வருகிறார்கள். இதுவரை விமானம் கடலில் மூழ்கியுள்ளதா என்பது குறித்து எந்தத் தகவலும், துப்பும் கிடைக்கவில்லை. இருப்பினும் வங்கக் கடலில் மர்மப் பொருள் மிதப்பதாக செய்திகள் வந்துள்ளன. அதுவும் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.