உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தில் சாதி, மத பிரச்சினையை தூண்டக்கூடாது - தேர்தல் ஆணையம் எச்சரிக்கை
சென்னை : உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடும் வேட்பாளர்கள் மத, இன, சாதி மற்றும் மொழி உணர்வுகளை துாண்டி வாக்கு சேகரிக்கக்கூடாது. சக வேட்பாளர்களின் சொந்த விஷயங்கள் மற்றும் அவர்கள் நடத்தை குறித்து பிரச்சாரம் செய்யக்கூடாது. வாக்காளர்களை வாக்குச்சாவடிகளுக்கு அழைத்து வர வாகனங்களை வாடகைக்கு அமர்த்தக்கூடாது என்று மாநில தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் 1,31,794 உள்ளாட்சிப் பதவிகளுக்கு அக்டோபர் 17, 19ஆம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. நேற்று முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. இந்நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் சட்டம் - ஒழுங்கு பிரச்னை, மோதல்கள், சர்ச்சைகள் ஏற்படுவதை தடுக்க வேட்பாளர் தகுதி மற்றும் தகுதியின்மை, வாக்காளர்களை அணுகும்போது கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள், நன்னடத்தை விதிகள், சட்டத்திருத்தங்கள் அடங்கிய 14 அத்தியாயங்கள் அடங்கிய வழிகாட்டுதல் கையேட்டை தேர்தல் ஆணையம் வெளியிட்டு எச்சரித்துள்ளது. அதில் குறிப்பிடப்பட்ட முக்கிய அம்சங்கள்:
•குற்றவியல் நீதிமன்றத்தால் ஆறு மாதத்துக்கு மேல் தண்டனை பெற்றிருப்பின் தண்டனை காலத்திலும் மற்றும் தண்டனை முடிவடைந்த நாளிலிருந்து ஆறு ஆண்டு காலத்துக்கும் தேர்தலில் போட்டியிடுவதற்கு தகுதி அற்றவராகக் கருதப்படுவார்கள். தேர்தல் குற்றச்செயல்களுக்காக தண்டனை பெற்றிருப்பின் தண்டனை பெற்ற நாளிலிருந்து ஐந்து ஆண்டு காலத்துக்குத் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவராகக் கருதப்படுவர்.
•தேர்தலில் போட்டியிடுபவர் மனநலம் குன்றியவராக இருக்கக்கூடாது. 1955ஆம் ஆண்டு குடியுரிமை பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தண்டனை பெற்றவராக இருத்தல் கூடாது.
•பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கவுன்சிலராக போட்டியிடுகிறவர்கள் அந்த உள்ளாட்சியுடன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ அல்லது பங்குதாரர் மூலமாகவோ எந்த ஒரு வேலைக்கான அல்லது பொருட்கள் வழங்குவதற்கான ஒப்பந்ததாரராக இருக்கக்கூடாது. கண்டுபிடித்தால் தகுதி நீக்கம் செய்யப்படுவர்.
•அரசுப் பணியாளராகவோ, அலுவலராகவோ இருக்கக்கூடாது. உள்ளாட்சிகளுக்கு சேர வேண்டிய தொகைகளைச் செலுத்தாமல் நிலுவையில் வைத்திருக்கக் கூடாது. சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட தகுதியின்மை எதுவும் பெற்றிருத்தல் கூடாது.
•கடந்த கால உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிட்டு வேட்பாளர் தேர்தல் செலவினக் கணக்கினை உரிய காலத்தில் தாக்கல் செய்ய தவறியமைக்காக மாநில தேர்தல் ஆணையத்தால் தகுதி நீக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டவராக இருப்பின், அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளில் இருந்து மூன்றாண்டுகளுக்கு உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட தகுதியற்றவராகக் கருதப்படுவர்.
•வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்களோ, அச்சுறுத்தல்களோ கொடுக்காமல் வாக்கு சேகரிக்கும் பணியை செய்ய வேண்டும். போட்டி வேட்பாளர்களைப் போட்டியிடவிடாமல் செய்வதை தவிர்க்கவோ அல்லது போட்டியிட செய்ய வைக்கவோ முறையற்ற வழிகளை கையாளக் கூடாது.
•மத, இன, சாதி மற்றும் மொழி உணர்வுகளை துாண்டி வாக்கு சேகரிக்கக்கூடாது. சக வேட்பாளர்களின் சொந்த விஷயங்கள் மற்றும் அவர்கள் நடத்தை குறித்து பிரச்சாரம் செய்யக்கூடாது. வாக்காளர்களை வாக்குச்சாவடிகளுக்கு அழைத்து வர வாகனங்களை வாடகைக்கு அமர்த்தக்கூடாது.
•தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர், எவருக்கும் நேரடியாகவோ அல்லது முறைமுகமாகவோ இடையூறு, அச்சுறுத்தல் ஏற்படுத்தக்கூடாது. வாக்காளர்களுக்கு உணவு வழங்குதல் மது மற்றும் போதைப் பொருட்களை வழங்குதல் கூடாது.
•வேட்பாளர் பெயரை முன்மொழிபவரது பெயர், போட்டியிடும் உள்ளாட்சி வார்டு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றிருக்க வேண்டும். வேட்புமனு படிவங்கள் தேர்தல் அலுவலகங்களில் கிடைக்கும். அச்சிட்டப் படிவம் கிடைக்கப்பெறாத நிலையில் கையால் எழுதியோ, தட்டச்சு செய்தோ வேட்புமனு தயாரித்து தாக்கல் செய்யலாம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.