முறைப்படி கல்யாணமாகாவிட்டாலும் கூட... 2வது மனைவிக்கும் பென்ஷன் தர வேண்டும் -ஹைகோர்ட்
சென்னை: முறைப்படி திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்தாலும் கணவரின் மறைவிற்குப் பின்னர் இரண்டாவது மனைவிக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவையில் தலைமை காவலராக பணியாற்றிய ஸ்டான்லி, கடந்த 1973ம் ஆண்டு ஜூன் மாதம் சுகந்தி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. திருமணமான சில ஆண்டுகளிலேயே கருத்து வேறுபாட்டால் ஸ்டான்லியும், சுகந்தியும் பிரிந்து விட்டனர்.
அதனைத் தொடர்ந்து 1976ம் ஆண்டு சுசீலா என்பவரை ஸ்டான்லி திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நக்கீரன் என்ற மகன் உள்ளார். தற்போது அவருக்கு 35 வயதாகிறது.
ஈரோட்டு நீதிமன்றத்தில் கடந்த 2003ம் ஆண்டு விவாகரத்து வாங்கினார் சுகந்தி. அதனைத் தொடர்ந்து 2005ம் ஆண்டு அவர் காலமானார்.
இதற்கிடையே கடந்த 2001ம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெற்றார் ஸ்டான்லி. 2007ம் ஆண்டு தனது இரண்டாவது மனைவியான சுசீலாவின் பெயரையும் பென்சனில் சேர்த்த ஸ்டான்லி, 2011ம் ஆண்டு காலமானார்.
ஆனால், இரண்டாவது மனைவியான சுசீலாவுக்கு குடும்ப பென்சன் வழங்க மறுக்கப் பட்டது. இதனை எதிர்த்து இந்தாண்டு பிப்ரவரி மாதம் சென்னை உயர்நீதிமன்றத்தில் சுசீலா வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஹரிபரந்தாமன், முதல் மனைவி விவாகரத்து வாங்குவதற்கு முன்னதாக இரண்டாவது திருமணம் நடைபெற்றுள்ளது. இதனால், அந்த திருமணம் செல்லாததாக கருதப் பட்டாலும், கடந்த 1976ம் ஆண்டு முதல் ஸ்டான்லியுடன் சேர்ந்து வாழ்ந்துள்ளார் சுசீலா.
இதற்கிடையே முதல் மனைவி சுகந்திக்கும் விவாகரத்து வழங்கப் பட்டு விட்டது. எனவே, ஸ்டான்லி இறந்த காலத்தில் இருந்து இதுவரை நிலுவையில் உள்ள பென்சன் தொகை அனைத்தையும் வரும் 12 வார காலத்திற்குள் சுசீலாவிற்கு வழங்க வேண்டும்' என உத்தரவிட்டுள்ளார்.
இனி வரும் காலங்களிலும் ஸ்டான்லியின் குடும்ப பென்சனை சுசீலா பெயருக்கே வழங்க வேண்டும் என அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.