ஓ.பன்னீர் செல்வத்தை மட்டும் தனியாக விட்டு விட்டு அத்தனை அமைச்சர்களும் பறந்து விட்டனர்!
சென்னை: ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலுக்காக அமைச்சர்கள் அனைவரும் தொகுதிக்குக் கிளம்பிப் போய் விட்டதால் தலைமைச் செயலகம் வெறிச்சோட ஆரம்பித்துள்ளது.
தமிழகத்தில் அதிமுக ஆட்சிக்காலத்தில் இடைத் தேர்தல் வந்தால் முதல்வரைத் தவிர அத்தனை அமைச்சர்களுக்கும் தேர்தல் பணியைக் கொடுத்து விடுவார்கள்.
வழக்கமாக ஓ.பன்னீர் செல்வம்தான் இந்த தேர்தல் பணிகளுக்குத் தலைமை தாங்கி குழுவை வழி நடத்துவார். ஆனால் இன்று அவரை விட்டு விட்டு மற்றவர்கள் தேர்தல் பணிகளைக் கவனிக்கக் கிளம்பியுள்ளனர்.
அமைச்சர்கள் அனைவரும் தற்போது ஸ்ரீரங்கம் தொகுதிப் பக்கம் காணப்படுகிறார்கள். இதனால் தலைமைச் செயலகம் பக்கம் அமைச்சர்கள் யாரையும் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
தேர்தல் பணியில் 2 பேர் மட்டுமே இடம் பெறவில்லை. முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும், உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தூர் பாண்டியன் மட்டுமே தேர்தல் பணிகளுக்கு போகவில்லை. மற்ற 29 பேரையும் தேர்தல் பணிக்கு அனுப்பி வைத்துள்ளார் ஜெயலலிதா.
நேற்று தலைமைச் செயலகத்தில் முதல்வரை மட்டுமே பார்க்க முடிந்தது. வேறு அமைச்சர்கள் வரவில்லை. கட்சிக்காரர்கள் கூட வரவில்லை. அதிகாரிகளும், அரசு ஊழியர்களுமே பணியில் இருந்தனர்.
குடியரசு தினத்தன்று அமைச்சர்கள் மீண்டும் .சென்னை வருவார்கள் என்றும் அது முடிந்ததும் மீண்டும் ஸ்ரீரங்கம் பறந்து விடுவார்கள் என்றும் தெரிகிறது.