கலாநிதி மாறன் கடிதத்திற்கு பதில் தர முடியாது… நீதிமன்றத்தில் சந்திக்க தயார்… உள்துறை அமைச்சகம் அதிரட
டெல்லி: சன் குழுமத்தின் 33 தொலைக்காட்சி சேனல்களுக்கு பாதுகாப்பு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில் மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் நேரடியாக தலையிட வேண்டும் என கலாநிதி மாறன் எழுதிய கடிதத்திற்கு உள்துறை அமைச்சகம் பதில் அளிக்காது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
சன் குழுமத்தின் 33 தொலைக்காட்சி அலைவரிசைகளின் உரிமங்களை 10 ஆண்டுகளுக்கு புதுப்பிக்கக் கோரி, மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை அமைச்சகத்திடம் விண்ணப்பிக்கப்பட்டது. மத்திய செய்தி, ஒலிபரப்புத் துறை விதிகளின்படி, தொலைக்காட்சிகளின் உரிமங்களை புதுப்பிக்கும் நடவடிக்கைக்கான அனுமதியளிப்பதற்கு முன்பு, அதில் இடம்பெற்றுள்ள இயக்குநர்கள் குழு, தலைவர் உள்ளிட்டோரின் பின்னணியை விசாரித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை அளிக்க வேண்டும்.
முறைகேடான தொலைபேசி இணைப்பு
மத்திய தொலைத் தொடர்பு, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் பதவி வகித்தபோது, சென்னையில் உள்ள தனது இல்லத்துக்கு பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 300 தொலைபேசி இணைப்புகளை பெற்று, சன் குழும தொலைக்காட்சிகளுக்கு சட்டவிரோதமாக பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக கலாநிதி மாறன், தயாநிதி மாறன் ஆகியோருக்கு எதிராக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
ஏர்செல் - மேக்சிஸ் விவகாரம்
இதேபோல், ஏர்செல் - மேக்சிஸ் விவகாரம் தொடர்பான சிபிஐயின் வழக்கு, சட்டவிரோத பணபரிவர்த்தனை தொடர்பான மத்திய அமலாக்க இயக்குநரகத்தின் வழக்கு ஆகிய 2 குற்றவியல் வழக்குகளும் கலாநிதி மாறன், தயாநிதி மாறன் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன.
எனவே, சன் குழுமத் தொலைக்காட்சிகளின் உரிமங்களை புதுப்பிக்கும் நடவடிககையில், பாதுகாப்பு தொடர்பான அனுமதிக்கு ஒப்புதல் அளிக்க மத்திய உள்துறை அமைச்சகம் மறுத்துவிட்டது.
கலாநிதி மாறன் கடிதம்
33 சன்குழும சேனல்களுக்கு பாதுகாப்பு ஒப்புதல் வழங்க மத்திய உள்துறை அமைச்சகம் மறுத்ததையடுத்து சன்குழும தலைவர் கலாநிதி மாறன் உள்துறை அமைச்சகத்துக்கு கடந்த வாரம் கடிதம் எழுதியிருந்தார். அதில், சன் டைரக்ட் மீதான சிபிஐ, அமலாக்கத்துறையின் வழக்குகளைக் கருத்தில் கொண்டு சன் குழும சேனல்களுக்கு பாதுகாக்பு உரிமம் வழங்க மறுக்கப்பட்டது நியாமற்றது என்று கூறியுள்ளார்.
தேசவிரோத புகார் இல்லை
மேலும், தேசவிரோத புகாரோ, கிரிமினல் புகார்களோ எதுவும் இல்லாத நிலையில் சேனல்களுக்கு பாதுகாப்பு ஒப்புதலுக்கு மறுப்பு தெரிவிததற்கான நியாயப்பாடு எதுவும் இல்லை என்றும் சன் குழுமம் மீது மட்டும் நடவடிக்கை எடுப்பதற்கான முகாந்திரம் இல்லை என்றும், இதனால் ஒப்புதல் வழங்க வேண்டுமாறும் கலாநிதி மாறன் குறிப்பிட்டிருந்தார்.
சன் குழுமத்திற்கு சிக்கல்
பல்வேறு தொலைக்காட்சி சேனல்கள் மீது குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கின்ற வேளையில், சன் குழும சேனல்கள் மட்டும் தனிமைப்படுத்தப்பட்டு பாதுகாப்பு அனுமதி வழங்க மறுக்கப்பட்டுள்ளதாக அந்த கடிதத்தில் கலாநிதி மாறன் சுட்டிக்காட்டியிருந்தார்.
விளக்கம் அளிக்க முடியாது
கலாநிதி மாறனின் கடிதம் தொடர்பாக பதிலளிக்கும் திட்டம் எதுவுமில்லை என்றும். இதுதொடர்பாக அந்நிறுவனம் வழக்கு தொடுத்தால், நீதிமன்றத்தில் அதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கமளிக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
பதில் தேவையில்லை
பாதுகாப்பு அனுமதிக்கு ஒப்புதல் அளிக்காததன் காரணத்தை சன் குழுமத்துக்கு ஏற்கெனவே தெரிவித்துவிட்ட நிலையில், கலாநிதி மாறனின் கடிதத்துக்கு பதிலளிக்க வேண்டியதில்லை என்று அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.