வா ஸ்ருதி போலாம்... கவர்னருக்கு பதில் வேறொருவரை காரில் ஏற்றிச் சென்ற டிரைவர்!
புதுச்சேரி: அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்த புதுவை கவர்னருக்குப் பதில் வேறு ஒருவரை விமான நிலையத்தில் காரில் ஏற்றிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுவை மாநிலத்தின் ஒரு பிராந்தியமான மாகி, கேரளாவின் உள்ளடங்கிய பகுதியாக இருக்கிறது. இங்கு அரசு சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக புதுவை கவர்னர் ஏ.கே.சிங் சென்றிருந்தார்.
விமானம் மூலமாக கேரள மாநிலம் கோழிக்கோடு சென்றடைந்தார் கவர்னர். முன்னதாக புதுவை கவர்னர் வரும் தகவல் கேரள அரசுக்குத் தெரிவிக்கப் பட்டிருந்தது. இதனால் அவரை மாகி அழைத்துச் செல்வதற்காக கேரள அரசு கார் ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.
கோழிக்கோடு விமான நிலையத்தில் வரவேற்பு பகுதியில் இருந்து நீண்ட தூரம் தள்ளி விமானங்கள் நிறுத்தப்படும். அங்கிருந்து பயணிகளை வரவேற்பு பகுதிக்கு பஸ்சில் அழைத்து வருவது வழக்கம். முக்கிய வி.ஐ.பி.க்கள் வந்தால் அவர்களை மட்டும் வரவேற்பு பகுதி வரை காரில் அழைத்து வருவார்கள்.
அதன்படி, கவர்னர் ஏ.கே.சிங்கை விமானத்தில் இருந்து வரவேற்புப் பகுதி வரை அழைத்து வருவதற்காக மற்றொரு கார் தயார் நிலையில் இருந்தது. ஆனால், அதில் இருந்த அதிகாரிகளுக்கு ஏ.கே.சிங்கை அடையாளம் தெரியவில்லை. இதனால், விமானத்தில் வந்த வெறொரு பயணியை கவர்னர் எனக் கருதி தங்களது காரில் வரவேற்புப் பகுதிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சென்ற பின்னர் தான், அவர் கவர்னர் அல்ல என்பது தெரிய வந்தது. உடனே மீண்டும் கவர்னரை அழைத்துச் செல்வதற்காக விமானம் நின்ற பகுதிக்கு அந்தக் கார் விரைந்தது.
இதற்கிடையே விமானத்தில் இருந்து இறங்கிய கவர்னர், கார் எதுவும் இல்லாததால் மற்ற பயணிகளோடு சேர்ந்து பேருந்து மூலமாக வரவேற்புப் பகுதிக்கு சென்றடைந்தார்.
அங்கு நடந்த தவறுகளுக்காக கேரள அதிகாரிகள் கவர்னரிடம் வருத்தம் தெரிவித்தனர். பின்னர் கேரள அரசு சார்பில் ஏற்பாடு செய்த காரில் ஏறி அவர் மாகிக்கு சென்றார்.
கவர்னர் ஏ.கே.சிங் எளிமையான பழக்க வழக்கங்கள் கொண்டவர். புதுவையில்கூட அடிக்கடி சைக்கிளில் பயணம் செய்வது உண்டு. சமீபத்தில் அரசு விழாவுக்கே கவர்னர் மாளிகையில் இருந்து அவர் சைக்கிள் மூலம் வந்தது குறிப்பிடத்தக்கது.