தேச துரோக வழக்கு: வைகோவிற்கு ஜூன் 2ஆம் தேதிவரை சிறை - செசன்ஸ் கோர்ட் உத்தரவு
தேச துரோக வழக்கில் கைதாகி உள்ள ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோவை ஜூன் 2ஆம் தேதி வரை சிறையில் அடைக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை ஜூன் 2ஆம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். வைகோ மீதான தேச துரோக வழக்கு ஜூன் 2ஆம் தேதிக்கு மேல் 5வது கூடுதல் நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கும் என்றும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 2009ஆம் ஆண்டு ஜூலை 15ந் தேதி குற்றம் சாட்டுகிறேன் என்ற ஆங்கில மொழியில் இருந்து தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட புத்தகத்தை ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டு பேசினார். அப்போது விடுதலை புலிகளுக்கு ஆதரவாக பேசியதாக வைகோ மீது தேச துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. ஆனால் அந்த வழக்கில் எந்த நீதிமன்ற நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தேச துரோக வழக்கு
இந்நிலையில், கடந்த 8 ஆண்டுகளாக இந்த வழக்கு நடந்துவந்தது. இந்நிலையில், எழும்பூர் நீதிமன்றத்தில் ஏப்ரல் 3ஆம் தேதி திடீரென தானே ஆஜரான வைகோ ஒரு மனுவை தாக்கல் செய்தார். அந்த மனுவில், தம் மீது நிலுவையில் உள்ள தேசத்துரோக வழக்கை விரைந்து முடிக்க வேண்டும். சிறைத் தண்டனையை நான் ஏற்க ஆயத்தமாகவே வந்திருக்கிறேன் என வலியுறுத்தியிருந்தார்.
சிறை சென்ற வைகோ
இந்த மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி கோபிநாத், நீங்கள் விரும்பினால் பிணையின் பேரில் நீங்கள் சிறை செல்லாமல் வெளியேறலாம்என்று கூறியிருக்கிறார். ஆனால், நீதிபதியின் கூற்றை ஏற்க மறுத்துவிட்டார் வைகோ. இதையடுத்து, இந்த வழக்கில் அவர் 15 நாட்கள் சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட்டு கோபிநாத் உத்தரவிட்டார்.
செசன்ஸ் நீதிமன்றத்திற்கு மாற்றம்
இதன்படி புழல் சிறையில் அடைக்கப்பட்ட வைகோ, கடந்த 17ஆம் தேதி மீண்டும் அதே வழக்கின் விசாரணைக்காக எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, இந்த தேச விரோத வழக்கை விசாரிக்கும் அதிகாரம் செசன்சு நீதிமன்றத்திற்குத்தான் உள்ளது அதனால், இந்த வழக்கை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றி, எழும்பூர் நீதிமன்ற மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார். மேலும், வைகோவை வருகிற 27ம் தேதி வரை சிறையில் அடைக்க மாஜிஸ்திரேட்டு உத்தரவிட்டார்.
ஜூன் 2வரை சிறை
10 நாட்கள் நீதிமன்ற காவல் முடிந்த பின்னர் இந்த வழக்கில் இன்று வைகோ சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, வைகோ ஜூன் 2ஆம் தேதிவரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதனையடுத்து புழல் சிறைக்கு வைகோ மீண்டும் அழைத்து செல்லப்பட்டார்.
சிறை செல்ல தயார்
இந்த தேச விரோத வழக்கில் என் மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை நான் மறுக்க மாட்டேன். நான் என்ன பேசினேனோ அதை அப்படியே ஒப்புக்கொள்வேன். இதனால் எனக்கு இந்த தேச துரோக வழக்கில் சிறை தண்டனை கிடைத்தாலும், அதை தயங்காமல் ஏற்பேன். சிறைக்கு செல்ல தயாராக இருக்கிறேன் என்று வைகோ கூறியுள்ளார்.
திமுக நீலிக்கண்ணீர்
நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, விவசாயிகள் பிரச்சினையில் திமுக நீலிக்கண்ணீர் வடிப்பதாக குற்றம் சாட்டிய வைகோ, பிரதமர் மோடி தமிழக விவசாயிகளை அவமானப்படுத்தி விட்டார் என்றார். வணிகர்கள் கடைகளை அடைத்ததன் காரணமாகவே முழு அடைப்பு போராட்டம் வெற்றி பெற்றது என்றும் வைகோ தெரிவித்தார்.