கமல்ஹாசன் வற்றாத நதியாக வாழ்ந்து தமிழ்த் திரையுலகை செழிக்க வைக்க வேண்டும்: சீமான் வாழ்த்துகள்
சென்னை: செவாலியர் விருது பெற்ற "பெருங்கலைஞன் கமல்ஹாசன் வற்றாத நதியாக வாழ்ந்து தமிழ்த் திரை உலகை செழிக்க வைக்க வேண்டும்" என்று நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது பெற்ற கமல்ஹாசனுக்கு அண்மையில் சீமான் வாழ்த்து தெரிவித்திருந்தார். அதில், பிரதமர் மோடி, முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்டோர் கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவிக்கவில்லை; அவருக்கு பரிசுத் தொகை அறிவிக்கவில்லை என சாடியிருந்தார்.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில் கமல்ஹாசனுக்கு வாழ்த்து தெரிவித்து தம்முடைய அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் சீமான் பதிவிட்டுள்ளதாவது:
சாதனையின் நாயகன்
நீண்ட நெடிய பாரம்பரிய பெருமைகளைக் கொண்ட தமிழ்த்திரையுலகில் பல சாதனைகள் தொடர்ச்சியாக நிகழ்த்தப்பட்டு இருக்கின்றன. அத்திரையுலக வரலாற்றின் சமகால சாதனையின் நாயகனாக கலைஞானி கமலஹாசன் திகழ்கிறார்.
பெருமிதம் மகிழ்வு
தற்பொழுது பிரான்ஸ் அரசின் உயரிய விருதான ‘செவாலியே' விருது உலக நாயகன் திரு.கமலஹாசன் அவர்களுக்கு அறிவிக்கப்பட்டிருப்பது தமிழினத்திற்கு மிகுந்த பெருமிதத்தையும் மகிழ்வையும் அளித்துள்ளது. ‘களத்தூர் கண்ணம்மா' திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் அவர்களால் பட்டைத்தீட்டப்பட்டு, 16 வயதிலே என்ற ஆகச்சிறந்த திரைக்காவியம் மூலமாக ‘இயக்குனர் இமயம்' அப்பா பாரதிராஜா அவர்களால் தமிழ்த்திரையுலகக் கிரீடத்தின் வைரமாகப் பதிக்கப்பட்டவர் உலக நாயகன் கமலஹாசன் அவர்கள்.
பிதாமகன்
திரைக்கலை அறிவியலின் அழகான குழந்தை. பொதுவாகத் திரைப்படங்கள் என்பவை மனித வாழ்வின் பிரதிபலிப்புகளாக நிறைவேறாத மானுடக்கனவுகளின் மீட்சியாகத் திகழ்கிறது. அசலான மனித வாழ்க்கையைத் தமிழ்த்திரையுலகில் மறக்க முடியாத காவியங்களாக, செல்லுலாய்டு சிற்பங்களாகச் செதுக்கிற திரையுலகப் பிதாமகன்களில் கமலஹாசன் முதன்மையானவர்.
பிறவிக் கலைஞன்
காதலை வெளிபடுத்தும் திரைப்படங்களில் மட்டுமல்லாது வறுமையின் நிறம் சிவப்பு, சத்யா, உன்னால் முடியும் தம்பி, அன்பே சிவம், மகா நதி போன்ற பல சமூக உணர்வை விதைக்கிற திரைப்படங்களின் அழுத்தமான முத்திரையை உலக நாயகன் கமலஹாசன் அவர்கள் பதித்து வருகிறார். எவ்வித அடையாளச் சிக்கல்களுக்குள்ளும் தன்னைப் பொறுத்திக்கொள்ளாது ஆவேசப்படும் இளைஞனாக, காதலில் உருகும் காதலனாக, மாற்றுத்திறனாளியாக, பெண்ணாக, குள்ள மனிதனாக, அடித்தட்டு விளிம்புநிலை மனிதனாக, அயல்நாட்டிலிருந்து திரும்பிவரும் பணக்கார வாலிபனாக, பாலக்காட்டு ஐயராக, கோயம்புத்தூர் கவுண்டராக, வில்லன் வியக்க வைக்கும் வில்லனாக, வயிறு குலுங்க வைக்கும் நகைச்சுவை மன்னனாக, பொருந்தி மிளிர்கிற திரு.கமலஹாசன் அவர்கள் ஓர் பிறவிக் கலைஞர்.
கலைஞர்கள் பிறக்கிறார்கள்...
நடிப்பு என்பது ஏதோ ஒன்றை கற்பனை செய்து அல்லது நிஜத்தில் நிகழ்வதைக் கவனித்துச் சில மனிதர்களை நகலெடுத்து செய்கிற வேலையல்ல! அது தனக்குள்ளாக இருக்கிற இன்னொரு மனிதனை, இன்னொரு உலகத்தைப் பிரசவிக்கிற வித்தை. நடிகர்கள் உருவாக்கப்படுகிறார்கள். ஆனால், கலைஞர்கள் பிறக்கிறார்கள் என்கிறார் முதுபெரும் திரைக்கலைஞன் மர்லன் பிராண்டோ.
சிவாஜியும் கமலும்
இந்த விதிக்கு சற்றும் குறையாமல் அசராமல் பொருந்தக்கூடியவர் நமது கமலஹாசன் அவர்கள். தமிழ்த்திரையுலகின் பெருமைக்குரிய அடையாளமாகத் திகழ்கிற நடிகர் திலகம் நமது ஐயா சிவாஜி கணேசன் தனது கலைவாரிசாக நேசித்த உலக நாயகன் கமலஹாசன் அவர்களும் நடிகர் திலகம் பெற்ற அதே உயரிய செவாலியே விருதை பெறுவது சிறப்பிலும் சிறப்பு.
கட்டித் தழுவி...
தற்போது பிரான்ஸ் அரசால் வழங்கப்பட்டிருக்கிற ‘செவாலியே' விருது இம்மண்ணில் திரைக்கலையை நேசித்து வாழக்கூடிய அனைத்துத்தமிழர்களுக்குமானது என்று நாங்கள் எண்ணி பெருமை கொள்கிறோம். உலக அரங்கில் தமிழ்த்திரையுலகைப் பிரதிநிதித்துவப்படுத்துக்கிற இம்மண்ணின் கலைஞன் கமலஹாசன் அவர்களைக் கட்டித்தழுவி என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். கமலஹாசன் எனும் பெருங்கலைஞன் வற்றாத நதியாகப் பல்லாண்டு காலம் நலத்துடன் வாழ்ந்து தமிழ்த்திரையுலகை செழிக்க வைக்க எனது உளமார்ந்த வாழ்த்துகள்!
இவ்வாறு சீமான் தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ளார்.