நல்லக்கண்ணு, நெடுமாறனுக்கு இல்லாத தகுதியா ரஜினிக்கு இருக்கு?: சீமான்
சென்னை: மக்களுக்காக போராடிய நல்லக்கண்ணு, நெடுமாறன் ஆகியோருக்கு இல்லாத தகுதி அப்படி ரஜினி இடத்தில் என்ன இருக்கிறது? என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
சென்னை திருவொற்றியூரில் நடந்த விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.
அப்போது அவர் கூறுகையில்,
ரஜினி
ரஜினியை பலரும் அரசியலுக்கு அழைக்கிறார்கள். மக்களுக்காக போராடிய நல்லக்கண்ணு, நெடுமாறன் ஆகியோருக்கு இல்லாத தகுதி அப்படி ரஜினி இடத்தில் என்ன இருக்கிறது? நம் மண்ணிற்காக, தமிழ் மொழிக்காக, இயற்கையை காக்க தங்கள் வாழ்க்கையை அற்பணித்த பலர் இருக்கையில் எதற்காக ரஜினியை முன்னிறுத்துகிறார்கள். அதை ஆதரிக்கவும் ஆட்கள் உள்ளனர். இந்த தமிழ் சமூகம் எங்கே சென்று கொண்டிருக்கிறது?
ஏதாவது ஒரு விஷயம்
ரஜினி மக்களுக்காக ஏதாவது ஒரு விஷயத்திலாவது உறுதியாக இருந்துள்ளாரா? அரசியலுக்கு அவர் வரட்டும் பார்த்துவிடலாம். அவர் தனியாக வந்தாலும் சரி, கூட்டணி வைத்து வந்தாலும் சரி. தேர்தல் வரட்டும் பிரபாகரனின் தம்பிகளா? அல்லது ரஜினி ரசிகர்களா? என்று பார்த்துவிடலாம்.
தனித்து போட்டி
2016ம் ஆண்டு தேர்தலில் தனித்து போட்டியா இல்லை கூட்டணி வைப்பீர்களா என்று கேட்கிறார்கள். தனித்து தான் போட்டி என்று நாம் பலமுறை சொல்லிவிட்டோம். வாழ்வோ, சாவோ தனித்து தான் போட்டி.
பிரபாகரன்
இங்கே எதற்காக பிரபாகரனை தலைவர் என்று கூறி அவருக்கு விழா எடுக்கிறீர்கள் என கேட்கிறார்கள். எனக்கு சம்பந்தமே இல்லாத பலர் இந்த மண்ணில் சிலருக்கு தலைவர் ஆகுகையில் தமிழின விடுதலைக்காக போராடிய பிரபாகரனை தலைவர் என்று கூறக் கூடாதா? சோனியா அன்னை ஆகலாம், நேரு மாமா ஆகலாம். ஆனால் தமிழுக்காக, மண்ணிற்காக போராடிய பிரபாகரன் அண்ணனாகக் கூடாதோ? அண்ணன் வழியில் நம் பயணம் தொடரும் என்றார் சீமான்.