புலிகள் அமைப்பு மீதான தடையை இந்தியா நீக்க சீமான் கோரிக்கை
ஐரோப்பிய யூனியன் நீக்கியது போன்று இந்தியாவிலும் விடுதலைப் புலிகள் அமைப்பு மீதான தடையை நீக்க வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
சென்னை; தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை இந்தியா நீக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு சீமான் அளித்த பேட்டியில், ஐரோப்பிய யூனியன் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கியது குறித்த கேள்விகளுக்குப் பதில் அளித்தார்.
அதில், "விடுதலைப் புலிகள் மீதான தடையை ஐரோப்பிய யூனியன் நீக்கியுள்ளது. இது மக்களின் நீண்ட நாள் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. மகிழ்ச்சியும் நம்பிக்கையையும் அளிக்கிறது. ஐரோப்பிய யூனியனுக்குள் நான் நுழையவே முடியாது. ஆனால், நான் இப்போது அங்குப் போக முடியும்.
தடையை நீக்கி விட்டதால், பாதிக்கப்பட்ட மக்களுக்காக பணத்தை புரட்ட முடியும். தடையில்லாமல் ஒரு கூட்டத்தை நடத்தலாம். அவர்களது கொடியை பிடிக்கலாம். அவர்கள் பற்றிய கருத்துக்களை வெளிப்படையாகப் பேச முடியும்.
ஐரோப்பிய யூனியன் தடையை நீக்கியதை விட இந்தியா தடையை நீக்க வேண்டும் என்பதுதான் பிரதான கோரிக்கை. இந்தியாவில் தடை இருப்பதால் வாழ முடியாமல் ஓடி வரம் தமிழ் மக்களைக் கூட தீவிரவாதிகளாகப் பார்க்கப்படும் அவலம் நிகழ்கிறது. அதனால் இந்தியா விதித்துள்ள தடையை நீக்க வேண்டும். அப்படிச் செய்தால்தான் ஐரோப்பிய யூனியன் தடை நீக்கியது முழுமை அடையும்" என்று சீமான் கூறினார்.