தமிழகத்தை இப்போது தமிழன் ஆள்வது மகிழ்ச்சிதான்.. ஆனால்.. சீமான் சொல்வதை பாருங்கள்!
தமிழகத்தில் தமிழன் ஆள்வது மகிழ்ச்சி அளிக்கிறது என்றாலும் காட்சி மாறவில்லையே என்று சீமான் கூறியுள்ளார்.
சென்னை; தமிழகத்தில் தமிழன் ஆள்வது மகிழ்ச்சி அளித்தாலும் ஜெயலலிதா ஆட்சியின் நீட்சியே நீடிக்கிறது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு சீமான் அளித்த பேட்டியில், தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சி குறித்த கேள்விகளுக்குப் பதில் அளித்தார்.
அதில், தமிழகத்தில் ஆள் மாறி ஆட்சி செய்வதில் பயனில்லை. அடிப்படை மாற்றத்தோடு ஆள் மாற்றம் நிகழ வேண்டும். ஜெயலலிதா ஆட்சியின் தொடர்ச்சிதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. ஆள் மாறி இருக்கிறதே ஒழியப் பழைய நிலைதான் நீடிக்கிறது.
ஒரு தமிழர் முதல்வராக ஆட்சியில் உட்கார்ந்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனாலும், நாம் கனவு காணும் ஆட்சி இது இல்லை. எனவேதான் இதனையும் நாங்கள் எதிர்க்கிறோம்.
தமிழகத்தில் தேர்தல் உடனடியாக வரும் சூழல் தற்போது இல்லை. அப்படியே வந்தாலும் மக்கள்தான் முதல்வர் யார் என்பதைத் தேர்வு செய்ய வேண்டும். மக்களை தேடிப் போய் வாக்கு கேட்கும் முறையை மாற்ற வேண்டும். நல்ல அரசியலை, நல்ல தலைவரை மக்கள் தேட வேண்டும் என்பதுதான் என் ஆசை. அப்படி நிகழ்ந்தால்தான் நாடும் மக்களும் நிம்மதியாக வாழ முடியும் என்று சீமான் கூறினார்.