தாமரை தண்ணீரில் மலரலாம்...தமிழரின் கண்ணீரில் மலர முடியாது... கொட்டும் மழையில் அக்னி கக்கிய சீமான்!
ஜிஎஸ்டி வரியால் மக்கள் கண்ணீரில் வாடும் போது பாஜக எப்படி தமிழகத்தில் வளரும் என்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேட்டுள்ளார்.
சென்னை : பாஜகவை விமர்சிக்கும் விதமாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தண்ணீரில் வேண்டுமானால் தாமரை மலரும், தமிழக மக்களின் கண்ணீரில் முளைக்க முடியாது என்று கூறியுள்ளார்.
சென்னை ஆவடியில் நாம் தமிழர் கட்சி சார்பில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சீமான் நேற்று இரவு எட்டு மணிக்கு பேசத் தொடங்கினார். பேசத்தொடங்கியதிலிருந்து லேசாக மழை பெய்யத் தொடங்கியது. சீமான் பேசிக்கொண்டு இருக்கும் போது கன மழை பெய்யத் தொடங்கியது. அப்போதும் அவர் பேச்சை நிறுத்தாமல் பேசிக்கொண்டே இருத்தார்.
நேப்கினுக்கு ஏன் வரி போட்டார்கள் என்று கேட்டால், சுயஉதவிக்குழு தயாரிக்கும் பொருளுக்கு வரி போடாவிட்டால் அயல்நாட்டு நிறுவனங்கள் புகுந்து விடும் என்று எச்.ராஜா சொல்கிறார். நிறுவனங்களை அனுமதிப்பதும் மத்திய அரசின் கையில் தானே இருக்கிறது.
இயற்கை வேளாண் பொருட்களுக்கு ஜிஎஸ்டி, சித்த மருத்துவ பொருட்களுக்கு ஜிஎஸ்டி, மாற்றுத்திறனாளிகளின் சக்கர நாற்காலிகளுக்கு ஜிஎஸ்டி என்று மக்களை நசுக்குகிறது மத்திய அரசு என்று குற்றம் சாட்டினார் சீமான்.
தாமரை மலர முடியாது
மத்தியில் ஆளும் பாஜகவை கடுமையாக சாடி பேசிய சீமான், மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் பொருட்களுக்கு வரி போட்டதால் அவர்கள் கண்ணீரில் வாடுகின்றனர். இவர்களின் கண்ணீர் மத்திய அரசை சும்மா விடாது. இந்தக் கண்ணீரில் மூழ்கி செத்துப் போய்விடும். தண்ணீரில் கூட தாமரை முளைக்கும் தமிழரின் கண்ணீரில் ஒரு போதும் முளைக்காது என்றார்.
டாஸ்மாக்கில் வளர்க்கலாம்
தேசப்பற்றை வளர்க்க வந்தே மாதரம் பாட வேண்டும் என்று சொல்கிறார்கள். திரையரங்குகளில் தேசப்பற்று பாடலைப் போடுகிறார்கள், டாஸ்மாக்கில் வந்தே மாதரம் பாடலைப் போட்டால் தேசப்பற்று நன்றாக வளர்ந்துவிடும்.
நாடு வளர்ந்ததா?
பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு நாடு வளர்ந்து விடும் என்றது பாஜக அரசு. ஆனால் இப்போது வல்லரசு நாடுகள் பட்டியலிலேயே இந்தியா இல்லை எங்கே போனது என்று கேட்டார் சீமான்.
திட்டங்களில் மட்டுமே இந்தியா
டிஜிட்டல் இந்தியா, மேக் இன் இந்தியா, மேட் இன் இந்தியா என்று திட்டங்களில் இந்தியா இருக்கிறது. பிரதமர் தான் இந்தியாவில் இல்லை. சொந்த நாட்டில் வாடும் மீனவர்களின் படகுகளை மீட்டுக் கொடுக்க முடியவில்லை பாஜகவால். இவர்கள் எப்படி நாட்டை வல்லரசாக்குவார்கள் என்று சீமான் கேட்டுள்ளார்.