நான் தீவிரவாதியா.. தமிழருவி மணியன் சொல்றதை எல்லாம் கண்டுகிறதில்ல… சீமான் பொளேர்
தமிழருவி மணியன் தன்னை தீவிரவாதி என்று சொன்னதை பொருட்படுத்தவில்லை என்று சீமான் கூறியுள்ளார்.
மதுரை: தமிழருவி மணியன், தன்னை தீவிரவாதி என்று சொன்னதை பொருட்படுத்தவில்லை என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் இன்று காலை நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களிடம் பேசும் போது, மக்கள் குடிக்கக் கூட தண்ணீர் கிடைக்காமல் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், அதிமுகவின் இரு அணிகளும் இந்தியா-சீனா போன்று சண்டை போட்டு கொண்டிருக்கிறார்கள் என்று கிண்டலடித்தார்.
மேலும், தமிழகத்தில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைகள் ஏராளமாக இருக்க, அதிமுக அணிகளின் பேச்சுவார்த்தை அர்த்தமற்றது என்றும் தொடர்ந்து இந்தப் பிரச்சனையை பார்ப்பதை விட்டுவிட்டு தமிழக மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்றும் சீமான் கூறினார்.
கீழடியில் 2600 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர்களின் வரலாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை முழுமையாக கண்டறிய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறிய சீமான், ஜான்சிராணிக்கு கொடுத்த முக்கியத்துவத்தை வேலுநாச்சியாருக்கு கொடுக்கவில்லை என்று கூறினார்.
இதனிடையே, தமிழருவி மணியன், சீமான் ஒரு தீவிரவாதி என்று கூறியுள்ளாரே என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதில் அளித்த சீமான், மக்கள் இயக்க தலைவர் தமிழருவிமணியன் என்னை தீவிரவாதி என்று கூறியதை பொருட்படுத்தவில்லை என்று கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார்.