எம்ஜிஆரால் முடிந்தது.. ரஜினியால் முடியுமா என்ன.. எல்லாம் சும்மா.. தெர்மாகோல் செல்லூர் ராஜு விளாசல்
எம்ஜிஆர் கட்சி ஆரம்பித்து மக்களிடம் வென்றவர் என்று அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார். அதே போல் ரஜினிகாந்த் அரசியலில் வெற்றி பெற முடியாது என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
சென்னை; கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு ரசிகர்களை சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் புகைப்படம் எடுத்துக் கொண்டதே அரசியல் பரபரப்பாகிவிட்டது.
தமிழகம் முழுவதும் உள்ள 15 மாவட்டங்களைச் சேர்ந்த ரசிகர்களை சந்தித்த அவரது, கடைசி நாள் உரை அரசியல் தலைவர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்றும் திறமையான தலைவர்கள் இருந்தும் பயனில்லை என்றும் ரஜினி பேசியது தமிழக அரசியலில் பரபரப்பை கிளப்பியது. இதற்கு பல அரசியல் கட்சித் தலைவர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அம்மா கட்சி எதிர்ப்பு
இதற்கு ஆளும் அதிமுக அம்மா கட்சியின் உள்ள அமைச்சர்கள் எம்எல்ஏக்கள், எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்து பேசி வருகின்றனர். குறிப்பாக, தம்பிதுரை தமிழகத்தில் சிஸ்டம் சரியாகத்தான் இருக்கிறது என்று பதில் கொடுத்தார்.
எம்ஜிஆர் மட்டுமே..
இதனைத் தொடர்ந்து, தெர்மாகோல் புகழ் செல்லூர் ராஜுவும் நடிகர் ரஜினிகாந்த்தின் பேச்சை கண்டித்துள்ளார். தமிழகத்தில் நடிகர் ஒருவர் கட்சித் தொடங்கி ஆட்சி அமைத்தார் என்றால் அது எம்ஜிஆர் மட்டுமே என்று கூறியுள்ளார்.
சிவாஜியே தோற்றவர்
அவரைத் தவிர வேறு யாராலும் கட்சி தொடங்கினாலும் ஆட்சி அமைக்க முடியாது என்று ஆவேசமாகக் கூறிய செல்லூர் ராஜு, நடிகர் திலகமாக மக்கள் மத்தியில் இடம் பெற்றிருந்த சிவாஜி கணேசனே கட்சித் தொடங்கி மக்களிடம் தோற்றவர் என்று ஆவேசமாக பேசினார்.
ரஜினி தோற்பார்
அதற்கடுத்த வந்த பாக்கியராஜ், விஜயகாந்த், டி.ராஜேந்திரன் என எல்லோருமே கட்சி ஆரம்பித்தார்கள். என்ன ஆனார்கள் என்று தமிழகத்திற்கு தெரியும். அதே போல் தான் நடிகர் ரஜினிகாந்த்தும் தமிழகத்தில் ஒன்றும் இல்லாமல் ஆவர் என்று செல்லூர் ராஜு கூறியுள்ளார்.