சீட்டுக்காக இப்படி செய்து விட்டார் செல்லூர் ராஜு.. ஈவிகேஎஸ் இளங்கோவன்
மதுரை: வரும் சட்டசபைத் தேர்தலில் தனக்கு கட்சி மேலிடம் மீண்டும் சீட் தர வேண்டுமே என்ற பயத்தில்தான் எனக்கு எதிராக அதிமுகவினரைத் தூண்டி விட்டு காவல்துறை உதவியுடன் போராட்டத்தை நடத்தியுள்ளார் அமைச்சர் செல்லூர் ராஜு என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியுள்ளார்.
கோர்ட் உத்தரவுப்படி மதுரையில் தங்கியுள்ள காங்கிரஸ் தலைவர் இளங்கோவன், தல்லாகுளம் காவல் நிலையத்தில் நேற்று முதல் நேரில் ஆஜராகி கையெழுத்துப் போட்டு வருகிறார். நேற்று அவர் கையெழுத்திட வந்தபோது அதிமுகவினர் பெரும் அமளியை ஏற்படுத்தி விட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இன்று 2வது நாளாக காவல் நிலையம் வந்து கையெழுத்திட்டார் இளங்கோவன். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய இளங்கோவன், நேற்று அமைச்சர் செல்லூர் ராஜு தூண்டுதலின் பேரில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர் மேலிடத்தில் நல்ல பெயர் வாங்க வேண்டும். மீண்டும் தனக்கு எம்எல்ஏ சீட் கிடைக்க வேண்டும் என்று இதனை செய்துள்ளார்.
நான் தங்கியிருக்கும் ஹோட்டலின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த எனது ஆதரவாளர்களின் கார் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. இதற்கு காரணமானவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை. இதற்கெல்லாம் நான் அஞ்சமாட்டேன்.
நான் பாரம்பரிய அரசியல்வாதி. எனக்கு எந்த பயமும் இல்லை. நான் சட்டப்படி, நீதிமன்ற உத்தரவுபடி மதுரையில் தங்கி கையெழுத்திடுகிறேன். இந்த விவகாரத்தில், எனக்கு ஆதரவு தெரிவித்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் உள்ளிட்ட அரசியல் தலைவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார் இளங்கோவன்.