மதுரை மாநகராட்சியில் செல்லூர் ராஜூ ஆதரவாளர்களுக்கு அதிக சீட்: அதிமுகவினர் கொதிப்பு
மதுரை: மதுரை மாநகராட்சி தேர்தலில் போட்டியிடும் 100 வார்டுகளுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியலில் 75 சதவீதம் அமைச்சர் செல்லூர் ராஜூ ஆதரவாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. சீட் கிடைக்காத அதிமுக சீனியர் நிர்வாகிகள், செல்லூர் ராஜூ மீது கட்சித் தலைமைக்குப் புகார் அனுப்பி வருவதால் பரபரப்பு எழுந்துள்ளது.
தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 17, 19ம் தேதிகளில் நடைபெற உள்ளது. அதிமுக பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளார்.
மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளுக்கும் அதிமுக வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. தற்போது வெளியாகியுள்ள வேட்பாளர் பட்டியலில் 75 சதவீதம் அமைச்சர் செல்லூர் கே.ராஜூவின் ஆதரவாளர்களே எனக் கூறப்படுகிறது. முன்னாள் மேயர் வி.வி.ராஜன் செல்லப்பா, அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மற்ற மாநில, மாவட்ட நிர்வாகிகளின் ஆதரவாளர்கள் மிகக் குறைவுதான் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
செல்லூர் ராஜூ
மதுரை மாநகராட்சி வார்டு வேட்பாளர் பட்டியல் ஒரு மாதத்துக்கு முன்பே தயாரிக்கப்பட்டது. மேயர் வாய்ப்பு பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட பிறகு சில வார்டுகளில் மட்டுமே வேட்பாளர் மாற்றம் நடந்துள்ளது. வேட்பாளர்களை வெற்றி பெற வைத்து அமைச்சர் பதவியை தக்க வைத்துக்கொள்ள திட்டமிட்டே பெரும்பாலும் வசதி படைத்தவர்களை செல்லூர் ராஜூ வேட்பாளராக்கி உள்ளதாக கூறப்படுகிறது.
புதியவர்களுக்கு வாய்ப்பு
தேமுதிகவில் இருந்து வந்த அரவிந்தன் உட்பட புதியவர்கள், திமுக உள்ளிட்ட மாற்றுக் கட்சிக ளில் இருந்து சமீப காலங்களில் வந்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. திமுக ஆட்சியில் மு.க.அழகிரியின் ஆதரவாளராக இருந்த தமிழ்நாடு அமெச்சூர் கபாடி கழகக் தலைவர் சோலை எம்.ராஜா, கிரம்மர் சுரேஷ் போன்றவர் களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
சோலைராஜாவுக்கு எதிர்ப்பு
சோலை எம்.ராஜா சமீப காலமாகவே செல்லார் ராஜூ வீட்டிற்கு செல்பவராக, அவரது தீவிர ஆதரவாளராக இருக்கிறார். ஆரம்பத்தில் மேயர் வாய்ப்பு பெண்களுக்கு ஒதுக்கப்படுவதற்கு முன் அவரைத்தான் மேயர் வேட்பாளராக்க முயற்சிகள் நடந்ததாகவும் கூறப்படுகிறது.
துணை மேயர் வாய்ப்பு
சோலைராஜா கவுன்சிலராக வெற்றி பெற்றால் துணை மேயர் வேட்பாளராகும் வாய்ப்பு சோலை எம்.ராஜா, கிரம்மர் சுரேஷ், கு.திரவியம், சாலை முத்து, எம்.எஸ்.பாண்டியன் ஆகியோர் முக்கியமானவர்களாகக் கருதப்ப டுகின்றனர். வெற்றி வாய்ப்பு பறிபோவதை தடுக்க சாலைமுத்து உட்பட அமைச்சருக்குப் பிடிக்காத சிலருக்கும் சீட் வழங்கப்பட்டுள்ளது. 80 சதவீதம் வரை அமைச்சரின் ஆதரவு பெற்றவர்களே சீட் பெற்றுள்ளனர்.
முக்கியமான வேட்பாளர்கள்
இந்த பட்டியலில் எம்.எஸ்.பாண்டியன் (5வது வார்டு), கிரம்மர் சுரேஷ் (15வது வார்டு), சோலை எம்.ராஜா (21வது வார்டு), கே.ராஜபாண்டியன் (20வது வார்டு), கு.திரவியம் (23வது வார்டு), ஜெயவேல் (47வது வார்டு), கே.சண்முகவள்ளி (70வது வார்டு), கண்ணகி பாஸ்கரன் (80வது வார்டு), சுகந்தி அசோக் (42வது வார்டு), சண்முகப்பிரியா (24வது வார்டு) ஆகியோர் முக்கியமானவர்களாகக் கருதப்படுகின்றனர்.
மேயர் வேட்பாளர் போட்டி
சண்முகவள்ளி, சுகந்தி அசோக், கண்ணகி பாஸ்கரன், சண்முகப்பிரியா ஆகியோர் பெண் மேயர் வேட்பாளராகக்கூடிய முக்கியமானவர்களாகக் கருதப்படுகின்றனர். ஆனால் அதிமுகவில் எதுவும் நடக்கலாம் என்பதால் மற்ற பெண் வேட்பாளர்களும், அமைச்சரை சந்தித்து ஆசி பெற்று வெற்றி பெற்றால் மேயராகும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
விருப்பமனு ஏன்?
மேற்கு தொகுதியில் தனது வெற்றிக்குப் பாடுபட்ட சிலருக்கும் சீட் வழங்கியதாகவும், சமுதாய ரீதியதாக சிலருக்கு முக்கியத் துவம் அளித்துள்ளதாகவும், இதனால் விருப்ப மனு பெற்றது கண்துடைப்புதான் என்கின்றனர்.
சீனியர்களுக்கு நோ சீட்
இந் நிலையில், அதிமுகவில் 4 முறை வெற்றி பெற்ற, 2 முறை வெற்றி பெற்ற, கடந்த முறை வெற்றி பெற்ற சீனியர் கவுன்சிலர்கள் உட்பட 43 பேருக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்படவில்லை என்பதால் பலரும் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ மீது புகார் அனுப்பிய வண்ணம் உள்ளனர். சிலர், சென்னைக்கு சென்று பட்டியலை மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது மதுரை அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குற்றச்சாட்டு
இதில் 93வது வார்டு அதிமுக கவுன்சிலர் ராஜா சீனிவாசனின் பெயர் இடம் பெறவில்லை. இந்த வார்டில் 60 சதவீதத்திற்கும் அதிகமாக பிராமணர் சமூகத்தினர் உள்ளனர். இவர்களின் பிரதிநிதியாக உள்ள எனக்கு வாய்ப்பளிக்காமல் போனதற்கு செல்லூர் ராஜூதான் காரணம். இது குறித்து முதல்வருக்கு புகார் அனுப்பியுள்ளேன். ஜாதி, பணம், உறவினர்களுக்கு முக்கியத்துவம் அளித்து சீட் வழங்கியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.
வேட்புமனு தாக்கல்
என்னதான் எதிர்ப்புகள் எழுந்தாலும், புகார்கள் வரிசை கட்டி நின்றாலும் அதிமுகவினர் ஒட்டு மொத்தமாக மனு தாக்கல் செய்து விட்டனர். அதிலும் சண்முகவள்ளி மனு தாக்கல் செய்த போது கூடுதல் கவனிப்பாகவே இருந்தது. மேயர் வேட்பாளர் பட்டியலில் இருக்கும் சண்முகவள்ளி என்றே ஊடகங்களில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.