சென்னையில் அமைச்சர் தங்கமணி வீட்டில் 20 அமைச்சர்கள் திடீர் ஆலோசனை- தினகரனுக்கு எதிராக போர்க்கொடி?
சென்னையில் மின்துறை அமைச்சர் தங்கமணி வீட்டில் 20 அமைச்சர்களும், அதிமுக நிர்வாகிகளும் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர்.
சென்னை: சென்னையில் மின்துறை அமைச்சர் தங்கமணி வீட்டில் 20 மூத்த அமைச்சர்களும், அதிமுக நிர்வாகிகளும் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டனர்.
அமைச்சர்கள் சரோஜா, நீலோபர் கபில், வளர்மதி, ராஜலட்சுமி ஆகிய 4 பெண் அமைச்சர்களும் தங்கமணியின் வீட்டுக்கு வந்தனர். இரட்டை இலை சின்னம் யாருக்கு என்று தேர்தல் ஆணையத்தில் அதிமுகவின் இரு அணிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டன. இதில் கலந்து கொள்வதற்கு முன்னர் மதுரையில் ஓ.பன்னீர் செல்வம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அதிமுக பொதுச் செயலாளராக நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ள நிலையில் சசிகலா அணியினருடன் இணைவீர்களா என்று கேட்டதற்கு, அதிமுகவின் இரு அணிகளும் இணைந்து செயல்படுவது பற்றி பேச்சு வார்த்தைக்கு வந்தால் அமர்ந்து பேசத் தயார் என்று ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
இதனிடையே இரட்டை இலையை பெறுவதற்காக டிடிவி தினகரன் தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயற்சித்ததாக இடைத்தரகர் ஒருவரை டெல்லி போலீஸார் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து தினகரனுக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில் தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை இரு முறை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இதுகுறித்து தம்பிதுரையிடம் கேட்டபோது தொகுதி பிரச்சினை தொடர்பாக பேசியதாக மழுப்பினார்.
மேலும் அதிமுக இணைவது குறித்து ஓபிஎஸ் பச்சைக் கொடி காட்டியது குறித்து கேட்டதற்கு, அவர்கள் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்தால் நாங்களும் தயார். டிடிவி தினகரனுக்கு எந்த நெருக்கடியும் அமைச்சர்கள் கொடுக்கவில்லை.
இந்நிலையில் 122 எம்எல்ஏ-க்களும் சென்னைக்கு வருமாறு எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டிருந்தார். ஐஎன்எஸ் கப்பலை நாளை பார்த்தபின்னர் ஆலோசனை நடத்தப்படும் என்று வெளியானது. தற்போது இரு அணிகளும் நாளை இணைய முடிவு செய்துள்ள நிலையில் அமைச்சர்கள் தங்கமணி வீட்டிலும், உடுமலை ராதாகிருஷ்ணன் வீட்டிலும் தனித்தனியாக அமைச்சர்கள் ஆலோசனை நடத்தினர். சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக ஆலோசனை நடத்தியதால் இரு அணிகளும் இணைவது உறுதியானதாக தகவல்கள் வெளியாகின.
இதனிடையே அதிமுக பொதுச் செயலாளர் பதவியிலிருந்து சசிகலாவும், துணை பொதுச் செயலாளர் பதவியிலிருந்து தினகரனும் ராஜினாமா செய்வர் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.