அரவக்குறிச்சியில் செந்தில் பாலாஜி, பழனிச்சாமிக்கு போட்டியிட தடையில்லை - ராஜேஷ் லக்கானி
சென்னை: அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிட செந்தில் பாலாஜி, பழனிச்சாமி இருவருக்கும் இதுவரை தடை விதிக்கப்படவில்லை என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார். தேர்தல் அறிவிக்கப்பட்ட 3 தொகுதிகளிலும் பறக்கும் படையின் பணி துவங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ராஜேஷ் லக்கானி, தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு தொகுதிக்கும் 2 தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர் என்று கூறினார். பண பட்டுவாடாவை தடுக்க பறக்கும் படை தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபடும் என தெரிவித்த லக்கானி, தேர்தல் பார்வையாளர்கள் வரும் நவம்பர் மாதம் 3ம் தேதி தமிழகம் வர உள்ளதாகவும் கூறினார்.
செந்தில் பாலாஜி
ஏற்கனவே வேட்பு மனுத்தாக்கல் செய்தோர் இடைத்தேர்தலில் போட்டியிடலாம் என்றும் அவர் தெரிவித்தார். அரவக்குறிச்சி தொகுதி தேர்தலில் போட்டியிட முந்தைய தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் செந்தில் பாலாஜி மற்றும் பழனிச்சாமி ஆகியோருக்கு இதுவரை தடை விதிக்கப்படவில்லை என்றும் ராஜேஸ் லக்கானி தெரிவித்துள்ளார்.
தேர்தல் அறிவிப்பு
கடந்த மே மாதம் தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெற்ற போது பணம் விநியோகம் செய்யப்பட்டதாக எழுந்த புகாரையடுத்து, தஞ்சாவூர் மற்றும் அரவக்குறிச்சி தொகுதிகளில் நடைபெற இருந்த தேர்தலை தேர்தல் ஆணையம் ஒத்திவைத்தது. மற்றொரு தொகுதியான திருப்பரங்குன்றத்தில் வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் சீனிவேலு தேர்தல் முடிவுகள் வெளியான பின் உடல்நலக் குறைவால் காலமானார். இதனையடுத்து மேற்கண்ட 3 தொகுதிகளுக்கும் வரும் நவம்பர் மாதம் 19ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வேட்புமனு தாக்கல்
புதுச்சேரி மாநிலத்தில் நெல்லித்தோப்பு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜான்குமார் ராஜினாமா செய்ததால் அங்கும் இடைத்தேர்தல் நவம்பர் மாதம் 19ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 4 தொகுதிகளுக்குமான வேட்பு மனுத்தாக்கல் அக்டோபர் 26ம் தேதி துவங்குகிறது.
நவம்பர் 19ம் தேதி வாக்குப்பதிவு
வேட்பு மனு தாக்கல் செய்ய நவம்பர் 2ம் தேதி கடைசி நாளாகும். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நவம்பர் 3ம் தேதி நடைபெறுகிறது. வேட்பு மனுவை திரும்ப பெற நவம்பர் 5ம் தேதி கடைசி நாளாகும். நவம்பர் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் நவம்பர் 22ம் தேதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.