தம்பிதுரை, விஜயபாஸ்கரை எதிர்த்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி போர்க்கொடி… பின்னணி இது தானாம்
தம்பிதுரை மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கரை எதிர்த்து முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி போர்க்கொடி உயர்த்தியுள்ளதற்கு பல்வேறு பின்னணிக் காரணங்கள் வெளியாகியுள்ளன.
கரூர்: கரூர் மாவட்டத்தில் மருத்துவக் கல்லூரி அமைப்பதற்காக 2014ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் 110 விதியின் கீழ் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பை வெளியிட்டார்.
இதற்கான அரசாணை 2015ல் வெளியிடப்பட்டது. மருத்துவக் கல்லூரி கட்டுவதற்காக 229 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டது. இந்தத் திட்டத்திற்காக வாங்கல் குப்புச்சிபாளையம் பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டது.
2016ல் அடிக்கல் நாட்டுவதற்கான பணிகளும் நடைபெற்றன. அதன் பிறகு மருத்துக்கல்லூரி கட்டும் பணிகள் கிடப்பில் போடப்பட்டன. மேலும், மருத்துவக் கல்லூரி கட்ட தேர்வு செய்யப்பட்ட இடம் புறக்கணிக்கப்பட்டு மாற்று இடம் தேடப்பட்டது.
மாற்று இடம்
குப்புச்சிபாளையத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி தேர்வு செய்த இடத்திற்கு மாற்றாக , கரூர் நகராட்சிக்கு உட்பட்ட காந்தி கிராமம் அருகில் அரசுக்கு சொந்தமான 20 ஏக்கர் புறம்போக்கு இடம் தேர்வு செய்யப்பட்டது. இந்த இடத்தில் கல்லூரி கட்ட பூமி பூஜையும் போடப்பட்டது. நகராட்சியில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டிருந்தது.
அதிகார சண்டை
இதனால் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும், லோக் சபா துணை சபாநாயகர் தம்பிதுரைக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இரு தரப்பினருக்கும் இடையே கடந்த 2 ஆண்டுகளாகவே பிரச்சனை நீடித்து வந்தது.
பகிரங்கக் குற்றச்சாட்டு
இந்நிலையில், ஜெயலலிதா அறிவித்த வாங்கல் குப்புச்சிபாளையத்திலேயே அரசு மருத்துவக் கல்லூரி கட்ட வேண்டும் என்று எம்எல்ஏ செந்தில்பாலாஜி தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றார். ஆனால் இதற்கு எதிராக கரூர் எம்பியான தம்பிதுரையும் அவருக்கு ஆதரவாக எம்.ஆர். விஜயபாஸ்கரும் செயல்படுவதாக செந்தில் பாலாஜி பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.
உண்ணாவிரதம்
மேலும், இவர்கள் இருவரையும் கண்டித்து வரும் 24ம் தேதி உண்ணாவிரதம் இருக்க அனுமதி கேட்டு நகர காவல் நிலையத்தில் மனு ஒன்றையும் அவர் அளித்துள்ளார். அதிமுகவில் 3 அணிகள் பிரிந்து நின்று சண்டையிட்டு வரும் நிலையில் செந்தில்பாலாஜியின் இந்த நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.