தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அதிகாரிகள் நியமனம் - அரசாணை வெளியீடு
சென்னை: உள்ளாட்சி அமைப்புகளில் சிறப்பு அதிகாரிகளை நியமிப்பதற்கான அரசாணையை இன்று தமிழக அரசு வெளியிட்டது. அரசாணைப்படி, ஊராட்சி பேரூராட்சி, நகராட்சி, மட்டுமல்லாது 12 மாநகராட்சிகளுக்கும் தனி அதிகாரிகள் நியமிக்கப்படுகிறார்கள்.
தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், உள்ளாட்சி அமைப்புகளில் பழங்குடியின மக்களுக்கு சுழற்சி முறையில் உரிய இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை. சென்னையில் 200 வார்டுகளில் ஒரு இடத்தில் கூட பழங்குடியினருக்கான இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை.
இது அரசியல் அமைப்பு சட்டத்திற்கும், பஞ்சாயத்து ராஜ் சட்டத்திற்கும் எதிராக இருப்பாதால் இதற்காக தமிழக அரசு பிறப்பித்த அரசாணைகளை ரத்து செய்து விட்டு சுழற்சி முறையை பின்பற்றி முறையாக இடஒதுக்கீட்டு பின்பற்ற வேண்டும் எனக் கூறி திமுக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் தேர்தலை ரத்து செய்ததுடன், புதிய அறிவிப்பு வெளியிட்டு டிசம்பர் 31-க்குள் தேர்தலை நடத்தி முடிக்கும்படி மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில் தற்போதைய உள்ளாட்சி அமைப்பின் பதவிக்காலம் அக்.,24 ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து, உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அதிகாரிகளை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணைக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
இந்த அரசாணையின்படி, ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் 12 மாநகராட்சி ஆகிய உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகத்தை தனி அதி்காரிகள் கவனிப்பார்கள். அவர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகளின் மேற்கொள்ள வேண்டிய அத்தியாவசிய பணிகளை கவனிப்பார்கள். உள்ளாட்சி அமைப்புகளின் முதல் கூட்டம் நடைபெறும் வரையில் இந்த தனி அதிகாரிகளுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.