பிரபல டிவி சீரியல் இயக்குநர் திருச்செல்வம் சாலை விபத்தில் சிக்கினார்!
பெரம்பலூர்: பிரபல டிவி சீரியல் இயக்குநர் திருச்செல்வம் சாலை விபத்தில் சிறு காயத்துடன் உயிர் தப்பினார்.
மெட்டி ஒலி சீரியலில் நடிகராகவும், துணை இயக்குநராகவும் பணியாற்றி கோலங்கள் சீரியல் மூலம் இயக்குநராக உயர்ந்தவர் திருச்செல்வம். பல்வேறு தொடர்களை இயக்கியுள்ள அவர் தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் நடந்த காதுகுத்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விட்டு சென்னை நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார்.
காரை அவரது உதவியாளர் ஓட்டி வந்தார். அந்தக் கார், பெரம்பலூர் தேசிய நெடுஞ்சாலை அருகே சின்னவலையம் என்ற இடத்தில் வந்தபோது, அவரது காரை முந்த டாட்டா ஏஸ் வாகனம் ஒன்று முற்பட்டது. அப்போது பெரியசாமி என்ற வயதானவர் குறுக்கே வந்து விட்டார்.
இதைப் பார்த்த திருச்செல்வத்தின் உதவியாளர், டாடா ஏஸ் வாகனம் மீது காரை மோதி வயதானவர் மீது மோதாமல் தவிர்த்தார். இதில் டாடா ஏஸ் வாகனம் குட்டிக் கரணம் போட்டு சாலையோரமாக விழுந்தது. திருச்செல்வத்தின் காரும் கீழே இறங்கி விழுந்தது. இதில் திருச்செல்வமும், அவரது உதவியாளரும் லேசான காயமடைந்தனர். டாடா ஏஸ் வாகனத்தில் இருந்தவர்களும் காயமடைந்தனர்.
இந்தப் பகுதியில் அடிக்கடி விபத்து நடப்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் கூட எங்கேயும் எப்போதும் பட இயக்குநர் சரவணன் இதே பகுதியில்தான் விபத்துக்குள்ளானார் என்பது குறிப்பிடத்தக்கது.