வங்கிகள் நமது அக்கவுண்டில் இருந்து எப்படியெல்லாம் பணத்தை எடுக்கின்றன தெரியுமா?
சென்னை: வங்கி சேவையை பயன்படுத்தும் நாம், அவை எதற்கெல்லாம் நம்மிடமிருந்து பணத்தை எடுத்துக்கொள்கின்றன என்பதை கவனிக்காமல் விட்டுவிடுகிறோம். ஆனால் சிறுக சிறுக அவை எடுக்கும் தொகையை கூட்டி பார்த்தால், அடேங்கப்பா.. என கூறும் அளவுக்கு அது பெரிதாக வந்து நிற்கும்.
இப்படி, வங்கிகள் எந்தெந்த சேவைகளுக்கெல்லாம், நமது கணக்கில் இருந்து பணத்தை எடுக்கின்றன, அல்லது அபராதம் விதிக்கின்றன என்பதை பார்க்கலாம் வாருங்கள்:
வங்கிகள் குறிப்பிட்ட அளவுக்கு பணத்தை அக்கவுண்டில் இருப்பு வைத்தே தீர வேண்டும் என்று நிபந்தனை விதிக்கின்றன. இந்த தொகை வங்கிக்கு வங்கி மாறுபடும். அவ்வாறு குறிப்பிட்ட கையிருப்பைவிட குறைந்துவிட்டால், அதற்காக வாடிக்கையாளர் கணக்கில் இருந்து அபராத தொகையை வங்கிகள் எடுத்துக்கொள்கின்றன.
பண பரிமாற்றத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வாடிக்கையாளர்கள் கோரிக்கை விடுக்கும்போதும் சில வங்கிகள் கட்டணம் வசூலிக்கின்றன. உதாரணத்திற்கு யாருக்காவது வாடிக்கையாளர் ஒருவர் காசோலை கொடுத்திருக்கலாம். அந்த நபர், பணம் எடுக்கும் முன்பாக, ஏதோ ஒரு காரணத்துக்காக வாடிக்கையாளர் அந்த பரிமாற்றத்தை நிறுத்த வங்கியை கோரலாம். அந்த சமயங்களில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சில வங்கிகளில் இச்சேவை இலவசம்.
டெபிட் கார்ட் பயன்பாட்டுக்காக கட்டணம் வசூலிக்கும் வங்கிகளும் உண்டு. ரூ.100 முதல் ரூ.500க்குள் இதுபோல கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன.
வங்கியிலுள்ள பண இருப்பு, பண பரிமாற்றம் போன்றவற்றை தெரிவிக்க இ-மெயில் மற்றும் எஸ்எம்எஸ் சேவைகளை வங்கிகள் அளிக்கின்றன. இதற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
வங்கி பரிவர்த்தனை குறித்த பேங்க் ஸ்டேட்மென்ட்டை வாடிக்கையாளர்கள் கேட்டால் அதற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட நபர் அல்லது நிறுவனத்திற்கு நமது வங்கி கணக்கில் இருந்து தானியங்கி முறையில் பணம் செல்ல ஏற்பாடு செய்ய முடியும். இ.எம்.ஐ,, லோன் போன்றவற்றின் போது இப்படித்தான் நடக்கிறது. குறிப்பிட்ட நாளில் வங்கி கணக்கில் போதிய இருப்பு இல்லை என்றால் வாடிக்கையாளரிடம் வங்கி அபராதம் வசூலிக்கிறது.
நெட் பேங் அல்லது, ஏடிஎம் டெபிட்கார்டு பாஸ்வேர்டை மறந்துவிட்டால் கூட சில வங்கிகள் புதிய பாஸ்வேர்ட் உருவாக்க கட்டணம் வசூலிக்கின்றன.