குடிக்கப் பணம் தராத "ஓனர்".. பைக்கை தீவைத்துக் கொளுத்திய விஜயகாந்த்தின் மாஜி டிரைவர்!
குடிக்க பணம் கொடுக்காததால் ஆத்திரமடைந்த டிரைவர் ஓனரில் பைக்கை எரித்த சம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி: குடிக்க பணம் தர மறுத்த ஸ்டியோ அதிபர் பைக் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி காமராஜபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் மில்லர். இவர் அங்கு ஸ்டியோ மற்றும் டிராவல்ஸ் நடத்தி வருகிறார். இவரிடம் முத்துகிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த அண்ணாத்துரை வேன் டிரைவராக வேலை பார்த்து வந்தார்.
இவர் அடிக்கடி குடித்து விட்டு வேலைக்கு வந்ததால் ஆத்திரம் அடைந்த மில்லர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அண்ணாதுரையை வேலையை விட்டு நீக்கி விட்டார். ஆனால் அதன் பின்பும் அண்ணாதுரை மில்லரை சந்தித்து அடிக்கடி குடிக்க பணம் வாங்கி சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பணம் கொடுப்பதையும் மில்லர் நிறுத்தி விட்டார்.
குடிக்க பணம் தராததால் வெகுண்ட அண்ணாதுரை மில்லர் வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த அவருடைய பைக்குக்கு தீ வைத்து விட்டு தப்பி ஓடினார். இதில் பைக் முற்றிலும் சேதமானது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த ஆறுமுகநேரி இன்ஸ்பெக்டர் சிவலிங்கம் பைக்கை எரித்த அண்ணாதுரையை கைது செய்தார். கைதான அண்ணாதுரை சென்னையில் நடிகர் விஜயகாந்துக்கு 1994 முதல் 2003 வரை கார் டிரைவராக வேலை பார்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.