திருவல்லிக்கேணியில் குடிநீருக்கு திண்டாட்டம்... எம்.எல்.ஏக்கள் விடுதியை முற்றுகையிட்ட பொதுமக்கள்
சென்னை திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான குடிநீர்ப் பஞ்சம் நிலவுவதால் பொதுமக்கள் காலிக் குடங்களுடன் சட்டமன்ற உறுப்பினர்கள் விடுதியை முற்றுகையிட்டு குடிநீர் பிடித்துச் செல்வதால் பரபரப்பு நி
சென்னை: திருவல்லிக்கேணி, சேப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுவதால் காலி குடங்களுடன் எம்.எல்.ஏ.க்கள் விடுதிக்கு பொதுமக்கள் படையெடுத்து தண்ணீர் பிடித்து செல்வதால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.
சென்னை சிந்தாதிரிப்பேட்டை, திருவல்லிக்கேணி, புதுப்பேட்டை, அண்ணாசாலை உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு, குடிநீர் முறையாகத் தண்ணீர் விநியோகம் செய்யப்படவில்லை. வறட்சியைக் காரணமாகக் காட்டும் சென்னைக் குடிநீர் வாரியம் மாற்று ஏற்பாடுகள் செய்யாமல் மக்களை அலைக்கழிப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
இதனால் திருவல்லிக்கேணி உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், தண்ணீர் பிடிக்க காலி குடங்களுடன் நேரடியாக எம்.எல்.ஏ.க்கள் விடுதிக்கே திரண்டு சென்று தண்ணீர் பிடித்துச் செல்கிறாரகள்.
சிறுவர்கள், பெண்கள் என குடும்பம் குடும்பமாகக் காலி குடங்களைத் தூக்கிக்கொண்டும், 3 சக்கர சைக்கிள்கள், மோட்டார் சைக்கிள்களில் மொத்தமாக காலி குடங்களை ஏற்றிக்கொண்டும் எம்.எல்.ஏ.க்கள் விடுதிக்கு வந்து தண்ணீரை பிடித்துச் செல்கின்றனர்.
வீடுகளுக்கு முறையாக தண்ணீர் விநியோகம் செய்யப்படாததால் குடும்பத்துடன் மோட்டார் சைக்கிளில் எம்.எல்.ஏ.க்கள் விடுதிக்கு வந்து தண்ணீர் பிடித்து செல்கிறோம். இதுபற்றி அதிகாரிகளிடம் தெரிவித்தால் ஏரிகளில் தண்ணீர் இல்லை என்று கூறுகின்றனர்.
அரபு நாடுகளில் இருப்பது போன்று கடல் நீரை குடிநீராக்கும் நிலையங்கள் அதிக எண்ணிக்கையில் அமைத்து தண்ணீர் பிரச்சினைக்கு தமிழக அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். குடிநீர் பிரச்சினையை தீர்க்க வீடுகளுக்கு முறையாக தண்ணீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று திருவல்லிக்கேணி வட்டார மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.