தமிழக - கேரளா எல்லைப் பகுதியில் தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம்
ஆலப்புழை, பத்தினம் திட்டா மாவட்டங்களில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் குடிநீருக்காகவும், விவசாயத் தேவைக்காகவும் தென் மலை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
செங்கோட்டை: தமிழக - கேரளா எல்லைப் பகுதியில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளதால் தென்மலை நீர்த்தேக்கத்தில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
தமிழக - கேரளா எல்லை ஆரியங்காவு மேற்குத் தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் கல்லடா ஆற்றில் அமைந்துள்ள தென்மலையில் கொல்லம், திருவனந்தபுரம், ஆலப்புழை, பத்தினம்திட்டா ஆகிய 4 மாவட்ட மக்களின் குடிநீர் மற்றும் விவசாய நிலங்களுக்கு தேவையான குடிநீர், விவசாயத்திருக்கு பயன்படும் தண்ணீரை கருத்தில் கொண்டு 24 கிமீ தூரம், 2 கிமீ அகலத்தில் 115 மீட்டர் உயரத்திற்கு மேற்கு தொடர்ச்சி மலைகளை மையமாக வைத்து கல்லடா ஆற்றின் குறுக்கே தென்மலை நீர்தேக்கம் அமைக்கப்பட்டது.
இந்த கல்லடா ஆறுதான் தென்மலை நீர்தேக்கத்தை நிரப்பி 4 மாவட்ட மக்களின் வாழ்வாதாரமாக உள்ளது. கடந்த ஆண்டு பொய்த்து போன தென்மேற்கு, வடகிழக்கு பருவமழையின் காரணமாக அணை முழுமையாக நிரம்பவில்லை. இந்நிலையில் அணையில் தண்ணீர் குறைந்து தற்போது 90அடி அளவு மட்டுமே தண்ணீர் இருப்பு உள்ளதால் இந்த அணையில் 7.5 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் இரண்டு யூனிட்டுக்கள் நிறுத்தப்பட்டு உள்ளன.
இந்நிலையில் ஆலப்புழை, பத்தினம் திட்டா ஆகிய மாவட்டங்களில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் குடிநீருக்காகவும், விவசாயத் தேவைக்காகவும் இந்த அணையில் இருந்து 3 தினங்களுக்கு 20 கன அடி நீர் திறந்துவிட கேரள மாநில அரசு உத்திரவிட்டுள்ளது.