தூத்துக்குடியில் ஹைடெக் விபச்சாரம்: ஆந்திரா பெண்கள் மீட்பு - புரோக்கர் கைது
தூத்துக்குடி: தூத்துக்குடி புறநகர் பகுதியில் ஹைடெக் முறையில் பாலியல் தொழில் செய்ததாக கிடைத்த தகவலை தொடர்ந்து போலீசார் அங்கு சோதனை நடத்தி பெண்களை மீட்டனர். புரோக்கரையும் போலீசார் கைது செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி புறநகர் பகுதியில் ஒரு குறிப்பிட்ட பகுதியில் அடிக்கடி சந்தேகம்படும் படியாக ஆண்கள் நடமாட்டம் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் மீளவிட்டான் அருகே விஎம்எஸ் நகரில் தனியாக இருந்த அந்த வீட்டை திடீரென சோதனை மேற்கொண்டனர்.
அப்போது அங்கு ஹைடெக் முறையில் பாலியல் தொழில் நடப்பது தெரிய வந்தது. அங்குள்ள அறை மற்றும் மொட்டை மாடியில் ஆண்களுடன் தங்கி இருந்த 3 பெண்கள் பிடிபட்டனர். மேலும் அந்த பெண்களை அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய தூத்துக்குடி அண்ணாநகரை சேர்ந்த புரோக்கர் ஒருவரும் சிக்கினார்.
புரோக்கரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் அந்த வீடு முடிவைத்தானேந்தலை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது என்றும் அங்கிருந்த பெண்கள் அனைவரும் ஆந்திராவை சேர்ந்த குடும்ப பெண்கள் என்பதும் உறவினர் வீடுகளுக்கு செல்வதாக குடும்பத்தினரிடம் சொல்விட்டு அங்கு வந்ததும் தெரிய வந்தது.
இதில் இரு பெண்கள் தங்கள் குழந்தைகளையும் அழைத்து வந்துள்ளனர். இதையடுத்து பாலியல் தொழிலுக்கு பயன்படுத்தப்பட்ட ஒரு வேனும், 5 செல்போன்களும் பறிமுதல் செய்யப்பட்டது.
தொழிலில் ஈடுபட்டவர்கள் ஆந்திராவை சேர்ந்தவர்கள் என்பதால் போலீசார் அவர்களை கடுமையாக எச்சரித்து அனுப்பி வைத்தனர். புரோக்கர் மீது மட்டும் வழக்கு பதிவு செய்தனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.