சொத்தை எழுதி தர மறுத்ததால் செக்ஸ் டார்ச்சர்: கோவை இன்ஜினியர் மீது மனைவி புகார்
கோவை: கோவையில் கணவர் செக்ஸ் டார்ச்சர் செய்வதாக மனைவி போலீசில் புகார் தெரிவித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை, சரவணம்பட்டி நேரு நகரை சேர்ந்தவர் கீர்த்தனா (24). இவர் கிழக்கு பகுதி அனைத்து மகளிர் போலீசில் அளித்துள்ள புகாரை பற்றிதான் இப்போது மகளிர் காவல் நிலையத்தில் பரபரப்பு பேச்சாக உள்ளது.
அந்த புகாரில் கீர்த்தனா கூறியுள்ளதாவது: நான் பி.எஸ்சி படித்திருக்கிறேன். எனக்கும், சத்தியமங்கலத்தை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவருக்கும் கடந்த 2010ம் ஆண்டு திருமணம் நடந்தது.
என் பெற்றோர் 30 பவுன் நகை, 75 ஆயிரம் ரொக்கம் வரதட்சணையாக வழங்கினர். திருமணத்திற்கு 4 லட்ச ரூபாய் செலவு செய்தார்கள். எனது கணவர் சுரேஷ்குமார் சரவணம்பட்டியில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார்.
எனது தந்தை சமீபத்தில் இறந்து விட்டார். இறப்பதற்கு முன் அவரது சொத்துக்களை என் பெயருக்கு மாற்றி எழுதி தந்தார். இந்நிலையில் என் பெயரில் உள்ள சொத்துக்களை, தனக்கு மாற்றம் செய்து தரவேண்டும் என கணவர் கேட்டார். இதற்கு நான் சம்மதிக்கவில்லை.
இதனால் கோபமடைந்த சுரேஷ்குமார், என் குடும்பத்தினரிடமிருந்து நகை, பணம் வாங்கி தருமாறு துன்புறுத்தினார். தினமும் எனக்கு விதவிதமாக செக்ஸ் டார்ச்சர் செய்தார். அவரின் செக்ஸ் தொந்தரவிற்கு எதிர்ப்பு காட்டியபோது கட்டையில் என்னை அடித்து உதைத்தார். இதில் காயமடைந்த என்னை எனது குடும்பத்தினர் சத்திமங்கலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர்.
என் கணவர் மீது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.
அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரியா மாலினி விசாரணை நடத்தி, சுரேஷ்குமார் மீது வரதட்சணை கொடுமை, கொலை மிரட்டல், மற்றும் தாக்குதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வருகிறார்.