Exclusive: நெல்லை சிறுவன் பலாத்கார வழக்கு.. பிரிட்டீஷ் பாதிரியாருக்கு குற்றப்பத்திரிகை
நெல்லை: நெல்லை மாவட்டத்தை சேர்ந்த சிறுவனை பலாத்காரம் செய்த வழக்கில் பிரிட்டீஷ் பாதிரியாருக்கு வள்ளியூர் குற்றவியல் நீதிமன்றம், குற்றப்பத்திரிகை நகல் வழங்கியது.
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே தளபதிசமுத்திரத்தை அடுத்த சின்னம்மாள்புரத்தில் ஒரு குழந்தைகள் காப்பகம் உள்ளது. இதில் 50க்கும் மேற்பட்ட ஆதரவற்ற சிறுவர், சிறுமிகள் உள்ளனர். இந்த காப்பத்தை பிரிட்டனைச் சேர்ந்த கிறிஸ்தவ பாதிரியாரான ஜொனாதன் ராபின்சன் (73) என்பவர் நடத்தி வந்தார்.
ராபின்சன் அவ்வப்போது இந்தியாவுக்கு வருவாராம். அப்போது இந்த காப்பத்தில் இருந்து ஏதாவது ஒரு சிறுவனை அழைத்துச் சென்று அவனிடம் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடுவதாக பரபரப்பு புகார் எழுந்தது. இந்த நிலையில் மார்ச், ஏப்ரல் மாதங்களில் ஜானதன் ராபின்சன் இந்த காப்பகத்திற்கு வந்தார். காப்பகத்தில் இருந்த 15 வயது சிறுவனை அவர் அழைத்து சென்றுள்ளார்.
சிறுவன் மீட்பு
ஏப்ரல் 13ம் தேதி சிறுவனை, டெல்லிக்கு அழைத்து சென்று அங்கு ஒரு விடுதியில் வைத்து அவனிடம் தவறாக நடந்துள்ளார். தொடர்ந்து ஒடிசா, சிம்லா போன்ற இடங்களுக்கு அழைத்து சென்று அங்கும் அவனிடம் தவறாக நடந்தாராம். பாதிக்கப்பட்ட சிறுவன் மூலம் இந்த விவகாரம் பெங்களூரில் உள்ள ஜஸ்டிஸ் அன்டு கேர் என்ற குழந்தை பாதுகாப்பு அமைப்புக்கு தெரிய வந்தது. அந்த அமைப்பினர் இது பற்றிய தகவல்களை சேகரித்து சிறுவனை மீட்டனர்.
இன்டர்போல் தேடியது
பின்பு இதுபற்றி குழந்தைகள் பாதுகாப்பு குழுவைச் சேர்ந்த சிகுராம் வள்ளியூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து காப்பக நிர்வாகி ராபின்சனை இந்தியாவுக்கு வரவழைத்து விசாரணை நடத்த திட்டமிட்டனர். அவர் தலைமறைவாக இருந்ததாக இன்டர்போல் மூலம், ரெட்கார்னர் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. இதையடுத்து ராபின்சனுக்கு சிக்கல் எழுந்தது. வள்ளியூரில் பதிவான வழக்கை ரத்து செய்யும்படி சென்னை ஹைகோர்ட் மதுரை கிளையில், ராபின்சன் தரப்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
ஹைகோர்ட் தள்ளுபடி
சமீபத்தில் அந்த வழக்கை தள்ளுபடி செய்த ஹைகோர்ட், வள்ளியூர் கோர்ட் விசாரிக்க உத்தரவிட்டது. ராபின்சன் இந்தியா வர வசதியாக, ரெட் கார்னர் நோட்டீசுக்கு இடைக்கால தடை விதித்து, கடந்த அக்டோபர் 16ம் தேதி மதுரை ஹைகோர்ட் கிளை உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து ராபின்சன் வரும் ஜனவரி 4ம் தேதி ஆஜராக வேண்டும் என்று வள்ளியூர் குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
வள்ளியூர் கோர்ட்
இந்நிலையில், நேற்றுமுன்தினம் காலை ராபின்சன் தரப்பில், வள்ளியூர் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது, அதில், இன்றே வழக்கு விசாரணையை முன்கூட்டியே எடுத்துக்கொள்ளுமாறும், ராபின்சனை நேரில் ஆஜர்படுத்துவதாகவும் கூறப்பட்டிருந்தது. இதை நீதிபதி ரஷ்கின்ராஜ் ஏற்றுக்கொண்டார்.
குற்றப்பத்திரிகை
இதைத்தொடர்ந்து, மதியம் ராபின்சன் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து வழக்கை வெள்ளிக்கிழமைக்கு நீதிபதி ஒத்திவைத்தார். இதையடுத்து நேற்று மதியம், ராபின்சன் கோர்ட்டில் ஆஜரானார். அவரிடம் குற்றப்பத்திரிகையின் நகல் வழங்கப்பட்டது.
நேரில் ஆஜராக விலக்கு
ராபின்சன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கிரேகொரி ரத்தினராஜ், இரு மனுக்களை தாக்கல் செய்தார். அதில ஒரு மனு, தொடர்ச்சியாக வழக்கை விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையுடையதாகும். மற்றொரு, மனு, ராபின்சனை நேரில் ஆஜராகுவதில் இருந்து கோர்ட் விலக்கு அளிக்க வேண்டும் என்பதாகும். ராபின்சன் வயது மற்றும் அவருக்கு நீரிழிவு நோய் இருப்பது உள்ளிட்டவற்றை காரணமாக கூறி, நேரில் ஆஜராக விலக்கு கோரப்பட்டது.
பிணை
இந்த மனுக்களை நீதிபதி பரிசீலனைக்கு ஏற்றுக்கொண்டார். ராபின்சனை ஜாமீனில் விடுவதற்காக, ராமன் மற்றும் சுடலை ஆகிய இரு உள்ளூர் பிரமுகர்கள், தலா ரூ.50 ஆயிரத்துக்கு பிணை கொடுத்தனர். இதை நீதிபதி ஏற்றுக்கொண்டார். இதையடுத்து வழக்கை திங்கள்கிழமைக்கு நீதிபதி ஒத்திவைத்தார். அன்று, அரசு தரப்பில் இருந்து, எதிர் வாதம் தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது.
மூத்த வக்கீல் குழு
இவ்வழக்கில், அரசு தரப்பில் வழக்கறிஞர் வனிதா ஆஜராகும் நிலையில், ராபின்சன் தரப்பில் கிரேகொரி ரத்தினராஜ் தலைமையில், துரைசாமி, அஸ்லிட் ஐன்ஸ்டீன், எஸ்,முருகானந்தம் உள்ளிட்ட வழக்கறிஞர்கள் ஆஜராகிறார்கள்.