மெரினா டூ மணிமண்டபம்... இரவோடு இரவாக மாற்றப்பட்ட சிவாஜி சிலை!
சென்னை மெரினா கடற்கரையில் அகற்றப்பட்ட நடிகர்திலகம்சிவாஜிகணேசனின் சிலை அடையாறில் உள்ள மணிமண்டபத்தில் வைக்கப்பட்டது.
சென்னை : மெரினா கடற்கரையில் இரவோடு இரவாக அகற்றப்பட்ட நடிகர் சிவாஜிகணேசனின் சிலை அடையாறில் கட்டப்பட்டு வரும் மணிமண்டபத்தில் நிறுவப்பட்டது.
சென்னை மெரினா மெரினா கடற்கரையில் காமராஜர் சாலையும் ராதா கிருஷ்ணன் சாலையும் சந்திக்கும் பகுதியில் காந்தி சிலைக்கு அருகில் நடிகர் சிவாஜி கணேசனின் சிலை அமைக்கப்பட்டது. சிவாஜிகணேசன் இடுப்பில் கையை வைத்தபடி கம்பீரமாக நிற்கும் சுமார் 8 அடி உயரத்தில் கம்பீர வெண்கலச் சிலைலையை 2006-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார்.
சிவாஜி சிலை மெரினா கடற்கரை சாலையில் நிறுவப்பட்டதற்கு அவரின் குடும்பத்தார் அப்போது நெகிழ்ச்சியோடு நன்றி தெரிவித்திருந்தனர். ஆனால் இந்த சிலையால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதாக எழுந்த புகாரையடுத்து இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கு போனது.
அகற்ற உத்தரவு
இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த காந்தியவாதி சீனிவாசன் என்பவர் சிவாஜி சிலை நிறுவப்பட்டதை எதிர்த்து சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். பல மாதங்களாக நடந்து வந்த அந்த வழக்கில் 2015-ம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பில், மெரீனா கடற்கரையில் உள்ள சிவாஜி சிலையை அகற்ற நீதிபதி உத்தரவிட்டார்.
அவகாசம்
அந்த உத்தரவை அப்போதைய ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசு ஏற்றுக் கொண்ட போதும் சிவாஜி சிலையை அகற்ற கால அவகாசம்கோரியது. அடையாறில் சிவாஜி மணிமண்டபம் கட்டும் பணிகள் முடிந்த பிறகு இடமாற்றப்படும் என்று அப்போது முதல்வதாக இருந்த ஜெயலலிதா சட்டசபையில் கூறினார்.
தலைவர்கள் வலியுறுத்தல்
சென்னை அடையாரில் சத்யா ஸ்டுடியோ எதிரில் கட்டப்பட்டு வந்த சிவாஜி மணிமண்டபம் பணிகள் சமீபத்தில் நிறைவு பெற்றன. எனவே சிவாஜி சிலை எந்த நேரத்திலும் அகற்றப்படலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. எனினும் சிவாஜி சிலையை மெரினா கடற்கரையில் உள்ள தலைவர்களின் சிலைக்கு அருகிலேயே அமைக்க வேண்டும் என்று அவரது பிறந்தநாளின் போது திருநாவுக்கரசர், சீமான் உள்ளிட்டோர் வலியுறுத்தினர்.
மாற்றம்
இந்நிலையில் நேற்று இரவு சிவாஜி சிலையை அகற்றும் அதிரடி நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொண்டது. நள்ளிரவு 1 மணிக்கு மெரீனா கடற்கரை காமராஜர் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பிறகு சுமார் 50 ஊழியர்கள் சிவாஜி சிலையை அகற்றத் தொடங்கினார்கள். வெண்கலச் சிலை தார்ப்பாய் போட்டு மூடி கட்டப்பட்டு பின்னர் ராட்சத கிரேன் மூலம் லாரியில் ஏற்றிச் செல்லப்பட்டு மணி மண்டபத்தில் நிறுவப்பட்டது.