அட பக்கிகளா... திருட்டுப் போன நகைக்குப் பதில் பணத்தைக் கொடுத்து பஞ்சாயத்து செய்த போலீஸ்!
கரூர்: கரூரில், திருட்டுப் போன நகையை மீட்டுக் கொடுப்பதற்குப் பதில், திருடனிடமிருந்து பணத்தை வாங்கி அதை நகையைப் பறி கொடுத்த மூதாட்டியிடம் கொடுத்து, பேசாமல் போய் விடு என கட்டப் பஞ்சாயத்து செய்த போலீஸாரின் செயல் அதிர வைத்துள்ளது.
தற்போது அந்த வயதான பெண்மணி, இதுதொடர்பாக மாவட் எஸ்.பியிடம் மனு கொடுத்துள்ளார்.
கரூர் மாவட்டம், கடவூர் ஒன்றியம் சுருமான்பட்டியின் வசித்து வரும் தனபாக்கியம். மூதாட்டியான இவர் அவரது மகன் பரமசிவம் தோட்டத்தில் கடலை விவசாயம் செய்து வந்தார். அந்த தோட்டம் அருகே குரங்குகள் அட்டகாசம் அதிகமாக இருப்பதால் அதனை விரட்ட காலை பொழுதில் தோட்டத்தில் அமர்ந்திருந்த போது மர்ம நபர்கள் 3 பேர் மூதாட்டி அணிந்திருந்த நகையை பறித்து சென்றுள்ளனர்.
இச்சம்பவத்தை அடுத்து அருகிலிருந்த பாலவிடுதி காவல்நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால் போலீஸார் புகாரைப் பதிவு செய்யவில்லை. இந்த நிலையில், குற்றவாளிகளை பிடித்து விட்டதாக காவல் நிலையத்திலிருந்து மூதாட்டி தனபாக்கியத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அங்கு விரைந்து வந்த அவர் போலீஸார் பிடித்து வைத்திருந்த நபரைப் பார்த்து, அவர்தான் குற்றவாளி என்று அடையாளம் காட்டினார். அடுத்து நடந்ததுதான் அதிர்ச்சிகரமானது. இதையடுத்து காவல் துறை ஆய்வாளர் மூதாட்டியிடம் உனக்கு நகைக்கான பணத்தை வாங்கிக் கொள். பணம் கிடைப்பதே பெரிது என்று கூறி, திருடனிடம் இருந்து ரூ 65 ஆயிரம் பணத்தை வாங்கி மூதாட்டியிடம் கொடுத்து விட்டு, எனக்கு ரூ 10 ஆயிரம் என்று கூறியுள்ளார்.
பின்னர், யாரிடமும் இதைப்பற்றி புகார் கொடுக்கக்கூடாது என மிரட்டி கட்டப்பஞ்சாயத்து செய்து அனுப்பி விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த மூதாட்டி, தனக்கு நகை வேண்டுமென்று கூறி இன்று கரூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் கண்ணீர் மல்க மனு கொடுத்தார்.