நல்லவேளை போலீஸ் ஸ்டேஷனுக்குள்ள வந்து திருடல!
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள சந்தைப்பேட்டை கிராமத்தில் காவல்நிலையம் அருகே உள்ள மளிகை கடையின் மேற்கூரையை உடைத்து பணம் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள பட்டிபுஞ்சை கிராமத்தைச் சேர்ந்தவர் ஜீவா. தற்போது புதுக்கோட்டையில் வசித்து வருகிறார். இவருக்கு கீரமங்கலம் சந்தைப் பேட்டையில் பல ஆண்டுகளாக மளிகை கடை உள்ளது.
நேற்று இரவு கடையை சாத்திவிட்டு சென்று இன்று காலை கடையை திறக்க வந்தபோது கடையின் மேல் இருந்த ஆஸ்பெட்டாஸ் சீட் உடைக்கப்பட்டு இருந்தது. கடையை திறந்து பார்த்த போது முதல் நாள் மளிகை பொருட்கள் விற்ற பணம் ரூபாய் 20 ஆயிரத்தை காணவில்லை.
இந்த சம்பவம் குறித்து ஜீவா போலீசில் புகார் கொடுத்துள்ளார். புகாரை ஏற்ற போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த பகுதி எப்போது மக்கள் நடமாட்டம் உள்ள பிரதான பகுதி. மேலும் கீரமங்கலம் போலீசார் இரவு ரோந்து பணியிலும் இருந்து வருகின்றனர். இந்த நிலையில் காவல் நிலையம் அருகில் இருந்த கடையில் கடையை உடைத்து திருட்டு நடந்திருப்பது அப்பகுதி மக்களிடம் பெரும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.