நள்ளிரவு வரை விற்பனை... ஜிஎஸ்டியால் மினி தீபாவளி போல் காட்சியளித்த விற்பனையகங்கள்!
ஜிஎஸ்டி அறிமுகத்தையடுத்து நேற்று நள்ளிரவு வரை சலுகை விலை களை கட்டியதால் தீபாவளிக் கூட்டமாக காணப்பட்டது.
சென்னை: ஜிஎஸ்டி வரி விதிப்பால் பொருள்களின் விலை உயரும் என்பதால் செல்போன், நகைகள், வீட்டு உபயோக பொருள்கள் நேற்று நள்ளிரவு வரை விற்பனை செய்யப்பட்டன.
ஜிஎஸ்டி வரி நேற்று நள்ளிரவு முதல் நாடு முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் செல்போன், நகைகள், டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின் உள்ளிட்ட பொருள்களுக்கு விலை உயரும்.
ஜிஎஸ்டி அமலாவதற்குள் தங்களிடம் உள்ள பொருள்களை விற்று காசாக்கி விட வேண்டும் என்ற முனைப்புடன் பல்வேறு நிறுவனங்கள், வாடிக்கையாளர்களை தள்ளுபடி மழையில் மிதக்கவிட்டன. தீபாவளி சீசனில்தான் நள்ளிரவு வரை வியாபாரம் களைகட்டும்.
எவ்வளவு விலை உயர்வு...
ஜிஎஸ்டியால் தங்க நகைகள் மீது கூடுதலாக 3 சதவீதமும், டிவி, ஏசி, வாஷிங் மெஷின் உள்ளிட்ட பொருள்களுக்கு கூடுதலாக 4 சதவீதம் அல்லது அதற்கு மேலும், செல்போன்களுக்கு 4 முதல் 5 சதவீதமும் விலை ஏறக்கூடும். இதனால் நடுத்தர மக்கள் பாதிக்கப்படுவர்.
நள்ளிரவில் கடைகள்
பொதுமக்களை மட்டுமல்லாமல், வியாபாரிகளையும் இந்த ஜிஎஸ்டி பாதிக்கும் என்பதால் தங்களிடம் உள்ள பொருள்களை ஜிஎஸ்டி அமலாவதற்குள் விற்று நாலு காசு பார்க்க வேண்டும் என்று நள்ளிரவு வரை கடைகள் திறந்து வைத்து விற்பனை செய்தனர்.
செல்போன், நகைகள் மீது ஆர்வம்
செல்போன் மற்றும் நகைகள் வாங்கத்தான் கடைகளில் கூட்டம் அலைமோதியது. மேலும் திருமண சீர்வரிசை பொருள்களுக்காக டிவி, வாஷிங் மெஷின், ஏசி உள்ளிட்ட பொருள்களை வாங்கவும் மக்கள் ஆர்வம் காட்டினர். ஃபுல்லி ஆட்டோமேட்டிக் வாஷிங் மெஷின் ரூ.12 ஆயிரத்துக்கு விற்கப்பட்டது.
கடைக்காரர்கள் ஹேப்பி
இந்த கூட்டத்தால் முக்கிய சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆங்காங்கே வாகனங்களை விட்டுவிட்டு கடைக்குள் மக்கள் சென்றதால் நெரிசல் ஏற்பட்டது. விற்பனையாளர்களுக்கு சரக்குகளைத் தள்ளி விட்ட திருப்தி, மக்களுக்கு குறைந்த விலையில் பொருட்கள் கிடைத்த மகிழ்ச்சி.
வாழ்க டிஜிட்டல் இந்தியா!