சசிகலாவிற்கு முதுகு வலி.. ஃபெரா வழக்கில் நேரில் ஆஜராக வேண்டுமா?.. நீதிமன்றம் மே 4ல் முடிவு
அந்நியச் செலாவணி வழக்கில் சசிகலா நேரில் ஆஜர் ஆவதில் இருந்து விலக்கு அளிக்கும் மனு மீது வரும் 4ம் தேதி முடிவு அறிவிக்கப்படும் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.
சென்னை: அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் நேரில் சசிகலா நேரில் ஆஜராக வேண்டுமா அல்லது காணொலி மூலம் ஆஜராக வேண்டுமா என்பது வரும் மே மாதம் 4ம் தேதி தெரிய வரும்.
அந்நியச் செலாவணி மோசடி வழக்கில் நேரில் ஆஜராவதற்குப் பதிலாக காணொலி மூலம் ஆஜராக அனுமதிக்க வேண்டும் என்று பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகலா, கடந்த 2 தினங்களுக்கு முன் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அதிமுக அம்மா கட்சி பொதுச் செயலாளர் சசிகலா, அந்நியச் செலாவணி மோசடியில் ஈடுபட்டதாக 1996ம் ஆண்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, சசிகலாவிற்கு முதுகு வலி இருப்பதால் நீண்ட தூரம் காரில் பயணம் செய்ய முடியாது என்றும் அதனால், காணொலி மூலம் சசிகலா ஆஜராக அனுமதிக்க வேண்டும் என்றும் சசிகலா தரப்பில் வாதிடப்பட்டது.
விசாரணையின் முடிவில் சசிகலா நேரில் ஆஜராக வேண்டுமா வேண்டாமா என்பது வரும் மே மாதம் 4ம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிமன்றம் கூறியது. மேலும், இந்த வழக்கில் தொடர்புடைய சசிகலாவின் உறவினரான பாஸ்கரன் மே மாதம் 4ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.