கலாமுக்கு மரியாதை செலுத்த இன்று டாஸ்மாக் கடைகளை இழுத்து மூடுங்கள்.. திருமா. கோரிக்கை
சென்னை: மக்களின் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாமுக்கு தமிழக அரசு உண்மையாக மரியாதை செலுத்துவதாக இருந்தால் இன்று அனைத்து மதுக் கடைகளையும், பார்களையும் இழுத்து மூட வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறுகையில்,. தமிழகத்தில் இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் உடல் நல்லடக்கத்தையொட்டி இந்த பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்று மதுக்கடைகள் மூடப்படாது என்று அறிவிக்கப்படவில்லை.
இப்படி மதுக் கடைகளை இன்று திறந்து வைத்திருப்பது கலாமை அவமதிக்கும் செயலாகும். எனவே அனைத்து மதுக் கடைகளையும், எலைட் கடைகளையும், மது பார்களையும் மூட வேண்டும்.
ஊழியர்களும் கோரிக்கை:
இதேபோல கடைகளை மூட வேண்டும் என்று டாஸ்மாக் பணியாளர் சங்கமும் கோரிக்கை வைத்துள்ளது. இதுதொடர்பாக டாஸ்மாக் பணியாளர் சங்க பொதுச் செயலாளர் தனசேகரன் தமிழக அரசுக்கு விடுத்துள்ள கோரிக்கையில், பொது விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் டாஸ்மாக் மட்டும் இயங்குவது முறையல்ல என்றார்.