பஸ் ஸ்டிரைக் எதிரொலி.. சென்னையில் களத்தில் இறக்கப்பட்ட தனியார் மினி பஸ்கள்
சென்னை: அரசு பஸ் ஊழியர் போராட்டத்தை சமாளிக்க வெளியூர்களில் இருந்து தனியார் மினி பஸ்கள் சென்னையில் இயக்கப்பட்டு வருகின்றன.
ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் போக்குவரத்து ஊழியர்கள் இன்று இரண்டாவது நாளாக ஸ்ட்ரைக்கில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தமிழகம் அரசுப் பேருந்துகள் போக்குவரத்து முடங்கியுள்ளது.
போராட்டம் காரணமாக சென்னையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. அலுவலகங்களுக்கு செல்வோர் நீண்ட நேரம் காத்திருந்தும் பஸ்கள் வராமல் ஆட்டோவில் செல்லும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
மொத்தம் உள்ள 3300 பஸ்களுக்கு பதிலாக 500 பஸ்களே இயக்கப்படுகிறது. முக்கிய வழித்தடங்களில் மட்டும் அந்த பஸ்கள் சென்று வருகின்றன. இதனால் மற்ற வழித்தடங்களில் பஸ்கள் இயக்கப்படவில்லை. அந்தப் பகுதியில் வசிப்பவர்கள் எங்கும் செல்ல முடியாமல் ஆட்டோ, கார் போன்ற வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர்.
இதற்கிடையே ஆட்டோக்களிலும் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. சென்னையில் மீட்டர் முறையை பயன்படுத்திதான் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
போராட்டத்தை சமாளிக்க சென்னை மாநகரில் தனியார் பஸ்களுடன் மினி பஸ்கள் இயக்க அரசு அனுமதி வழங்கியது. இதையடுத்து வெளி மாவட்டங்களில் இருந்து இருந்து 620 தனியார் பஸ்கள், மினி பஸ்கள் சென்னை வந்தன. அவை இன்று காலை முதல் கோயம்பேட்டில் இருந்து பிராட்வே, திருவான்மியூர், தாம்பரம், செங்குன்றம், ஆவடி, திருமழிசை உள்பட 20-க்கும் மேற்பட்ட இடங்களுக்கு சென்று வருகின்றன. அவற்றில் தூரத்துக்கு ஏற்ப ரூ.5, ரூ.10, ரூ.15, ரூ.20 என கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
தி.நகர் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் சரிவர இயக்கப்படவில்லை என பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர். அடையாறு, அண்ணா பல்கலைக் கழகம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இல்லாமல் பயணிகள் பெரும் அவதி அடைந்தனர். தி.நகரில் இருந்து தாம்பரம் வழித்தடத்தில் மட்டும் மினி பஸ்கள் இயக்கப்பவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.