4 குடும்ப நல நீதிமன்றங்கள்; 384 வழக்குகள்; இருப்பதோ ஒரே ஒரு நீதிபதி - இது சென்னை ஹைகோர்ட் நிலைமை!
சென்னை: சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள 4 குடும்பநல நீதிமன்றங்களில் உள்ள 384 வழக்குகளும் ஒரே நீதிபதி முன்பு விசாரிக்கப்பட்டு வருகின்றது.
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் 4 குடும்பநல நீதிமன்றங்கள் உள்ளன. இதில் 2 நீதிமன்றங்களில் நீதிபதிகள் பணியிடம் காலியாக உள்ளது.
முதலாவது மற்றும் இரண்டாவது கூடுதல் குடும்பநல நீதிமன்றங்களில் நீதிபதிகள் சாருஹாசினி, கலைமதி ஆகியோர் பணியாற்றி வந்தனர். இவர்கள் நீதிபதி இல்லாத 2 நீதிமன்றங்களின் வழக்குகளை சேர்த்து விசாரித்து வந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் குடும்ப சூழ்நிலையின் காரணமாக நீதிபதி கலைமதி திடீர் விடுப்பில் சென்று விட்டார்.
இதனால் நேற்று 4 குடும்பநல நீதிமன்றங்களில் விசாரணைக்கு வந்த அனைத்து வழக்குகளையும், ஒரே நீதிபதியான சாருஹாசினி முன்பு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது. 300க்கும் மேற்பட்ட வழக்குகளை ஒரே நீதிபதி ஒரே நாளில் விசாரிப்பது சாத்தியமற்றது என்பதால் பெரும்பாலான வழக்குகளின் விசாரணை தள்ளிவைக்கப்பட்டது.
2 ஆவது நாளான இன்றும் 4 நீதிமன்றங்களில் உள்ள 384 வழக்குகள் நீதிபதி சாருஹாசினி முன்பு விசாரணைக்கு பட்டியலிடப்பட்டது. 4 நீதிமன்றங்களில் உள்ள வழக்குகள் முதலாவது கூடுதல் குடும்பநல நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதால், அங்கு கூட்டம் குவிந்தது. வழக்கம்போல, பெரும்பாலான வழக்குகள் விசாரணை தள்ளி வைக்கப்பட்டது. இதனால் வழக்கிற்காக வரும் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.