36 வருடங்களுக்கு முன்னர் ரயில் நிலையத்தில் தொலைந்து போன பெற்றோர் - தேடிப் பரிதவிக்கும் சகோதரிகள்!
சென்னை: சென்னையில் 36 வருடங்களுக்கு முன்னர் ரயில் நிலையத்தில் காணாமல் போன தங்களுடைய பெற்றோரினை தேடி வருகின்றனர் இரண்டு சகோதரிகள்.
சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ காலனியை சேர்ந்த ராஜேஸ்வரி மற்றும் அவருடைய அக்கா அன்னம்மாள் ஆகிய 2 பேரும் 36 வருடங்களுக்கு முன்பு காணாமல்போன தங்கள் பெற்றோரை தேடிவருகின்றனர்.
இவர்கள் 2 பேரும் பெற்றோரை தேடி செல்லாத இடம் இல்லை, ஆனாலும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. விடா முயற்சியாக பெற்றோரை தேடும் பணியில் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இருவருக்கும் திருமணமாகிவிட்டது.
துறைமுகத்தில் வேலை:
ராஜேஸ்வரி அரும்பாக்கத்திலும், அன்னம்மாள் காஞ்சிபுரத்திலும் வசித்து வருகின்றனர். இதுகுறித்து ராஜேஸ்வரி, "என்னுடைய தந்தை பெயர் கமலநாதன், தாயார் நீலா. எனக்கு அன்னம்மாள், சாந்தி ஆகிய 2 அக்காவும், கிருஷ்ணமூர்த்தி என்ற அண்ணனும் உள்ளனர். எனது தந்தை துறைமுகத்தில் ஊழியராக வேலை செய்துவந்தார். எனக்கு ஒரு வயது இருக்கும்போது உடல்நிலை சரியில்லாமல் போனது.
பெற்றோர் இருவரையும் காணவில்லை:
அப்போது என் பெற்றோர் என்னையும், அக்கா அன்னம்மாளையும் மின்சார ரயிலில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள். அப்போது என் அக்காவுக்கு 4 வயது. ரயில் நிலையம் வந்ததும் அம்மாவுடன் நானும், அக்காவும் இறங்கிவிட்டோம். எனது தந்தையை காணவில்லை. அப்போது எனது அக்காவிடம் என்னை கொடுத்துவிட்டு, அப்பாவை தேடி அழைத்துக் கொண்டு வருகிறேன் என்று கூறி எனது தாயார் சென்றார். அதிக நேரம் காத்திருந்தும் தாய், தந்தை 2 பேரையும் காணவில்லை.
இருவருக்கும் திருமணம் முடிந்தது:
பின்னர் போலீசார் எங்களை மீட்டு கோர்ட்டில் ஒப்படைத்தனர். கோர்ட் எங்களை தண்டையார்பேட்டையில் உள்ள ஒரு ஆதரவற்றோர் விடுதியில் சேர்த்தது. பின்னர் புரசைவாக்கம் விடுதி, கெல்லீஸ் விடுதி என ஒவ்வொரு விடுதியிலும் சேர்ந்து படித்தோம். அக்கா டெய்லர் வேலைக்கு படித்துள்ளார். நான் ஐ.டி.ஐ. (இன்ஸ்ட்ரூமென்ட் மெக்கானிக்), டெய்லரிங் மற்றும் எம்.ஏ. (சமூகவியல்) படித்து முடித்துள்ளேன். எங்கள் 2 பேருக்கும் திருமணமாகிவிட்டது.
பாசத்துக்காக ஏங்கித் தவிக்கின்றோம்:
அவள் காஞ்சிபுரத்திலும், நான் சென்னையிலும் வசித்து வருகிறோம். சிறு வயதிலேயே பெற்றோரை தொலைத்துவிட்டதால் தாய், தந்தை பாசத்துக்காக நாங்கள் ஏங்கி தவிக்கிறோம். அதனால் எங்களது தாய், தந்தையரை தேடி வருகிறோம். எனது தந்தை வேலை பார்த்த துறைமுகத்தில் தேடினோம். அங்கு சரிவர பதில் கிடைக்கவில்லை.
தேட முடியாமல் அலைக்கழிப்பு:
அங்கும், இங்குமாக அலைக்கழிக்கிறார்கள். எந்த ரயில் நிலையத்தில் சிறு வயதில் எங்கள் பெற்றோரை தவறவிட்டோம் என்று தெரியாததால் ரயில் நிலையத்திற்கு சென்று தேடமுடியவில்லை. தாய்-தந்தை பாசத்தை விடவும் மேலானது இந்த உலகில் எதுவும் இல்லை. ஆதரவற்றோர் விடுதிகளில் தங்கி படித்ததால் பெற்றோரின் பாசம் என்றால் என்ன? என்பது தெரியாமலேயே போய்விட்டது.
எங்களிடம் சேர்த்து விடுங்கள்:
ஒரு முறையாவது அந்த பாசத்தை அனுபவித்துவிடவேண்டும் என்று துடிக்கிறோம். எங்கள் பெற்றோர் கிடைத்த உடன் முதல் கேள்வியாக அவர்களிடம் இவ்வளவு நாள் எங்களை ஏன் தேடவில்லை? என்று தான் கேட்போம்" என்று தெரிவித்துள்ளார்.